சென்னை,டிச.11- மத்திய சென்னைக்குட்பட்ட எழும்பூர் பகுதி புல்லாபுரம்,ஓசான்குளம் மக்களின் அடிப்படைத்தேவைகள் புறக்கணிக்கப்பட்டால் மக்களைத்திரட்டி அருகில் உள்ள மாநகராட்சி அலுவலகத்திற்கு பூட்டுப்போடும் இயக்கம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா எச்சரித்துள்ளார். இப்பகுதி மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், ஒடுக்கப்பட்ட ஏழை எளிய மக்கள் வாழும் புல்லாபுரம், ஓசான்குளம் பகுதி தொடர்ந்து ஆட்சியாளர்களால் வஞ்சிக்கப்பட்டுவருவது கண்டிக்கத்தக்கது என்றார். ஏழைமக்களுக்கு நல்லகுடியிருப்பு , மின்சார வசதி, தரமான குடிநீர் வசதி, மருத்துவ வசதி, செய்துதருவதாக வாக்குறுதி அளித்து உலகவங்கியிடமிருந்து 4ஆயிரம் கோடி கடனை பெற்றுவந்த முதலமைச்சர் , துணை முதலமைச்சர் இவர்களுக்காக ஒரு பைசாகூட செலவழித்ததாகத் தெரியவில்லை, சென்னையில் மாநகராட்சி அதிகாரிகள் பெரும்பகுதியினர் லஞ்சம் பெறாமல் தங்களுக்கான பணியைச் செய்வதில்லை. ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் டாஸ்மாக், நடமாடும் மதுபான விடுதி திறப்பதற்குப் பதில் விளையாட்டுத் திடல், உடற்பயிற்சிக்கூடம், நூலகம் திறக்கலாம். எழும்பூரில் இங்கு மட்டுமன்றி பல இடங்களில் காவல்துறையினர் தலித் இளைஞர்களை அச்சம் ஏற்படுத்தும் வகையில் தாக்கிவருகின்றனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று கூறிய செல்வா, புல்லாபுரம் ஓசான்குளம் பகுதியில் சாலைவசதிகளை மேம்படுத்த வேண்டும், கழிவுநீர் அடைப்பை சரிசெய்யவேண்டும், நாள்தோறும் குப்பைகள் அகற்றப்படவேண்டும், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைத் தடுத்து சுகாதாரமாக வாழ வழி செய்யவேண்டும் என்றார். இந்த மக்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டத்திற்கு சுரேஷ் தலைமை தாங்கினார். எழும்பூர் பகுதிக்குழு உறுப்பினர் கே.முருகன், செங்கொடி சங்க பொதுச்செயலாளர் பி.சீனிவாசன், வி.ஆறுமுகம், ஏ.ரவி, பி.கே.மூர்த்தி, பி.சக்திவேல், ஏ.நாகராணி, கே.குமார் ஆகியோர் பங்கேற்றனர். நிறைவாக ஜிம் பி.சீனிவாசன் நன்றி கூறினார்.