tamilnadu

img

வன்மத்தோடு நிறுத்தப்பட்ட சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை - மாநில அரசு முயற்சிக்க சிபிஎம் வேண்டுகோள்!

வன்மத்தோடு நிறுத்தப்பட்ட சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை ஒன்றிய அரசு உடனடியாக வழங்கிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

மாணவர்கள் கல்வியில் பின்தங்கியுள்ள நிலையை கணக்கில் கொண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி - 1 அரசு சச்சார் கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் சிறுபான்மை மாணவர்களுக்கான பல்வேறு கல்வி உதவித் தொகைகளை உத்தரவாதப்படுத்தியதோடு புதிதாக ஒன்றாம் வகுப்பு முதல் பயிலும் சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை அளித்தது. இது தவிர, மொத்த எண்ணிக்கையில் 30 சதவிகிதம் பேகம் ஹஸ்ரத் மஹால் பெயரில் மாணவிகளுக்கு ப்ரிமெட்ரிக் கல்வித் தொகையையும் அளித்து வந்தது.

இந்த நிலையில் ஒன்றிய பாஜக அரசாங்கம் சிறுபான்மையினர் மீதான வன்மத்தோடு இந்தாண்டு முதல் 1 – 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை நிறுத்தியதோடு, மௌலானா அபுல்கலாம் ஆசாத் ஃபெலோஷிப்பையும் வெளிநாட்டில் பயிலும் சிறுபான்மை மாணவர்கள் பெரும் கடனுக்கான வட்டிக்கு அளித்து வந்த மானியத்தையும் ரத்து செய்துவிட்டது.

இந்த நிலையில் சிறுபான்மை மாணவர்களுக்கு தற்போது அமலில் உள்ளபடி, ப்ரி மெட்ரிக் ஸ்காலர்ஷிப், போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப், பேகம் ஹஸ்ரத் மஹால் ஸ்காலர்ஷிப், மெரிட் கம் மீன்ஸ் ஸ்காலர்ஷிப் உள்ளிட்ட எந்த உதவித்தொகையும் ஒன்றிய அரசாங்கத்திடமிருந்து இதுவரை வரவில்லை.

சிறுபான்மையினர் மீதான வன்மத்தினால் ஒன்றிய அரசாங்கம் நயவஞ்சகமாக சிறுபான்மை மாணவர்களின் கல்வியை பாதிக்கும் வகையில் இந்த உதவித்தொகைகளை நிறுத்தி வைப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. ஒன்றிய அரசு உடனடியாக சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை வழங்கிட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்துகிறது.

மேலும், மாநில அரசு ஒன்றிய அரசின் உரிய அதிகாரிகளோடு தொடர்புகொண்டு இந்த கல்வி உதவித் தொகைகளை பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.