தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியோடு தேனீர் விருந்தில் பங்கேற்கும் கேள்வியே எழவில்லை என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:
"இப்போது நடைமுறையில் இருந்துவரும் ஆளுநர் ஏற்பாட்டை சி.பி.ஐ(எம்) ஏற்கவில்லை. ஒன்றிய ஆட்சியின் முகவர்களாக, மாநில சுயாட்சிக்கு விரோதமாக செயல்படும் ஆளுநர்கள் என்ற ஏற்பாட்டை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தி வருகிறோம்.
தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம் பெற்றதில் இருந்தே அரசியலைமைப்புக்கு விரோதமாக செயல்படுகிற்றார். கூட்டாட்சிக்கு விரோதமாக இருந்துவருகிறார். அப்பட்டமாக அரசியல் செய்துவரும் ஆர்.என்.ரவி அந்த பதவியில் நீடிப்பதே இழுக்கு என சி.பி.ஐ(எம்) பலமுறை கூறியுள்ளது. தொடர்ந்து அவருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டிவருகிறது. எனவே அவருடைய தேனீர் விருந்தில் பங்கேற்பதென்ற கேள்வியே எழவில்லை." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.