tamilnadu

மைதிலி சிவராமன் மறைவுக்கு சிபிஐ-மதிமுக இரங்கல்....

சென்னை:
கம்யூனிஸ்டு இயக்கத்தின் மூத்த முன்னோடியும், சமூகப் போராளியுமான தோழர் மைதிலி சிவராமன் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுவும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் இரங்கல் தெரிவித்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஆந்திர மாநிலம், காக்கிநாடாவில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த மைதிலி சிவராமன், சிறுவயதில் தனது பாட்டியிடம் இருந்து போராட்ட உணர்வை உள் வாங்கியவர்.

1968 டிசம்பர் 25  கீழ் வெண்மணியில் 44 தலித்துகள் உயிரோடு எரிக்கப்பட்ட கொடூரத்தை ஆய்வு செய்து குற்றச் செயலுக்கான சமூகக் காரணங்களையும், அரசு நிறுவனங்களின் வர்க்கம் மற்றும் சாதி சார்பு செயல்பாடுகளையும் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியவர். வாச்சாத்தியில் மலைவாழ் மக்களும், ஆதிவாசிகளும் அரசின் அட்டூழியங்க ளுக்கும், மிருகத்தன அடக்குமுறைக்கும் ஆளான போது அவர்களுக்கு நீதி கேட்டு உரத்த குரலில் முழங்கியவர். அன்னாரின் மறைவுக்கு  செவ்வணக்கம் கூறி, அஞ்சலி செலுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ”தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க பெண்ணுரிமைப் போராளியாக பொதுவுடமை இயக்கத்தில் பணியாற்றியவர்;பல ஆண்டுகளாகத் தொழிற்சங்க யக்கத்திலும்,பெண்கள் இயக்கத்தைக் கட்டுவதிலும் பழுத்த அனுபவம் பெற்றவராகத் திகழ்ந்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

;