சென்னை
தமிழகத்தில் கொரோனா பரவல் கணிக்க முடியாத அளவிற்கு மின்னல் வேகத்தில் உள்ளது. கடந்த 3 நாட்களாக 4 ஆயிரத்துக்குள் இருந்த தினசரி கொரோனா பாதிப்பு இன்று மீண்டும் 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால் மக்கள் மீண்டும் அதிர்ச்சியில் உறைந்துள்ள நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 4,231 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு 1,26,581 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் இன்று ஒரே நாளில் 65 பேர் பலியாகிய நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,765 ஆக அதிகரித்துள்ளது. ஆறுதல் செய்தியாக 3,994 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 78,161 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து கொரோனா பாதிப்பில் இறங்குமுகத்தை காட்டி வரும் சென்னையில் இன்று 1,216 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் அங்கு மொத்த பாதிப்பு 73,728 ஆக உயர்ந்துள்ளது.
மதுரையை பின்னுக்குத்தள்ளிய விருதுநகர்
கடந்த ஒருவாரமாக கொரோனா பாதிப்பில் சென்னைக்கு அடுத்து மதுரை தான் இருந்தது. ஆனால் இன்று அந்த இடத்தை திருவள்ளூர் பிடித்துள்ளது. மேலும் விருதுநகர் 3-வது இடத்தை பிடித்து மதுரையை 4-வது இடத்துக்கு தள்ளியது. திருவள்ளூரில் இன்று 364 பேருக்கும், விருதுநகரில் 289 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மதுரையில் இன்று 262 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 254 பேருக்கும், தூத்துக்குடியில் 196 பேருக்கும், செங்கல்பட்டில் 169 பேருக்கும், நெல்லையில் 110 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.