tamilnadu

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டண விபர அறிவிப்பு பலகை... அமைச்சர் உத்தரவு.....

சென்னை:
சென்னை கிண்டியில் உள்ள கிங் ஆய்வகத்தில் கொரோனா சிகிச்சை மையம் செயல்படுகிறது. 500-க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் இந்த மையம் செயல்பட்டு வருகிறது.

அங்கு அரசு சார்பில் கூடுதலாக 100 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள் ளது. அதை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.அதை தொடர்ந்து அங்கு பணியாற்றும் 750 முன்கள பணியாளர்களுக்கு மளிகை பொருட்களையும் வழங்கினார்.பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், “சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் துவங்கப்பட்டுள்ள ‘தாமதமில்லாத’ வார்டுகளை தமிழகம் முழுவதும் அனைத்து குறைந்தபட்சம் 10 படுக்கைகளுடன் உருவாக்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.தீவிரமில்லாத கொரோனா சிகிச்சைக்காக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப் பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனையில் வசூலிக்க வேண்டிய கட்டணம் விவரம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மிதமான ஆக்சிஜன் உதவி இல்லாமல் ஒரு நாள் சிகிச்சை கட்டணமாக ரூ.5 ஆயிரமும், ஆக்சிஜன் உதவியுடன் கூடிய சிகிச்சை கட்டணமாக ரூ.15 ஆயிரமும் நிர்ணயிக்கப்படுகிறது.சென்னை, மதுரை, கோவை மற்றும் அடையாளம் காணப்பட்ட மருத்துவமனைகளுக்கு  ரூ. 5 ஆயிரம் கூடுதல் கட்டணமாகும். சேலம், திருச்சி, நெல்லை, குமரி, தஞ்சை, ஈரோடு மற்றும் அடையாளம் காணப்பட்ட மருத்துவமனைகளுக்கு  ரூ.3 ஆயிரம் கூடுதல் கட்டணமாகும். மேலும் நகர வகை பிரிவின்படி தரக் கட்டணமும் (ஏ1 மற்றும் ஏ2) வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

அதிதீவிர கொரோனா சிகிச்சை கட்டணம் விவரம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தீவிர சிகிச்சை பிரிவு வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய ஒரு நாள் சிகிச்சை கட்டணமாக ரூ.35 ஆயிரமும், தீவிர சிகிச்சை பிரிவில் ஊடுருவாத வெண்டிலேட்டர் வசதி கொண்ட ஒரு நாள் சிகிச்சை கட்டணமாக ரூ.30 ஆயிரமும், தீவிர சிகிச்சை பிரிவில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய ஒருநாள் சிகிச்சைக்காக ரூ. 25 ஆயிரமும் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த கட்டண விபரங்களை சம்பந்தப் பட்ட அனைத்து தனியார் மருத்துவமனைகளும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பெரிய அளவிலான அறிவிப்பு பலகைகளில் வைக்க வேண்டும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதும் அச்சமடைந்து மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டாம். முதலில் பரிசோதனை (ஸ்கிரீனிங்) மையங்களுக்கு சென்று அனைத்து வகை பரிசோதனைகளையும் செய்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

;