“அ ச்சமில்லை... அச்சமில்லை... அச்சமென்பதில்லையே- இச்சகத்துளொரெலாம் எதிர்த்து நின்ற போதிலும்- அச்சமில்லை... அச்சமில்லை... அச்சமென்பதில்லையே” என்று பாடிய பாரதி; பெண்களை எள்ளி நகையாடுவோரை “மோதி மிதித்துவிடு பாப்பா... அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா” எனவும் கூறி ஆவேசக் கனலை எழுப்பி மகளிருக்கு உத்வேகம் மூட்டினார்.
அதே வேகத்தோடு விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி நகரில் பொள்ளாச்சி பாணியில் நடைபெற்றுள்ள இளம் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ள சம்பவங்களை பொது வெளிக்கு கொண்டுவருவதற்கும், இதன் மூலம் மேலும் பெண்கள் பாதிக்கப்பட்டி ருந்தால் அவர்களுக்கு புகார் அளிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்த வும், இந்த வன்கொடுமைகளை மறைத்து குற்றவாளிகளை தப்புவிக்க உதவுவோரை தண்டிக்கவும் கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்களன்று (ஜூன்24) கள்ளக்குறிச்சி நகரில் நடத்தவுள்ளனர். பல மாதங்களாக கள்ளக்குறிச்சி நகரில் இளம் பெண்கள்; குறிப்பாக பருவத்தின் வாசலில் நின்று அன்பை பரிமாறி காதல் புரிந்து எதிர்காலத்தைப் பற்றி திட்டமிட மாலை நேரங்களில் அமர்ந்து பேசும் காதல் இணை யரை குறிவைத்து அவர்களை அவர்க ளுக்குத் தெரியாமல் வீடியோ படம் எடுத்து அதனை வைத்து அப்பெண்களை மிரட்டி பின்னர், அந்த இளம் பெண்களை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கி, அதையும் வீடியோ எடுத்து அதைக் காட்டி பாதிக்கப்பட்ட பெண்களை மேலும் வன்கொடுமைக்கு ஆளாக்கும் வழக்கமுள்ள ஒரு சமூக விரோத கும்பல் செயல்பட்டு கொண்டிருந்துள்ளது. பொதுவெளியில் காவல் துறையின ருக்கும் இது தெரிந்துதான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பது பேச்சு. இந்நிலையில் ‘கள்ளக்குறிச்சி அம்மன் நகரைச் சேர்ந்த ராஜா மற்றும் வஉசி நகரைச் சேர்ந்த வேலுமணி ஆகிய இருவரும் தன் மகளை கிண்டல் செய்ததாகவும் இதனை தட்டிக்கேட்ட தன்னை கொலை செய்து விடு வோம்’ என மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் தாயார் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் அந்த இருவரையும் கைது செய்து விசாரித்த போது குற்றவாளி ராஜாவின் கைபேசியில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் ஏராளமான தொகை கைமாறியதால் இவை வெளியே வர வில்லை என்றும், அழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனைக் கேள்விப்பட்ட கள்ளக்குறிச்சி நகர செய்தியாளர்கள் இது தொடர்பாக ராஜா குடியிருக்கும் வீட்டின் தெருவில் பொதுமக்களி டம் விசாரித்துள்ளனர். இந்த விசாரணை யில் “ராஜாவின் நடவடிக்கைகள் சந்தேகத்துக்குரியதாகவே உள்ளன. அவர் இப்படிப்பட்ட பல வேளைகளில் ஈடுபடுவதாகவும் இதற்கு வசதியாக அவர் செய்யக்கூடிய கார் பைனான்ஸ் மற்றும் கார் வாங்கி விற்கும் தொழில் வசதியாக இருந்துள்ளது” எனவும் கூறினர். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை, செயற்குழு உறுப்பி னர் பி.சுப்பிரமணியன், டி.எம்.ஜெய்சங்கர், வட்டச் செயலாளர் பி.மணி மற்றும் அ.பா.பெரியசாமி உள்ளிட்ட குழுவினர் சம்பவ இடமாக கூறப்பட்ட குள்ளக் கருப்பன் கோவில் அருகில் உள்ள ராஜாவின் கரும்பு தோட்டம், அதன் நடுவில் உள்ள மோட்டார் பம்பு அறை ஆகியவற்றையும், ஏரிக்கரை பகுதியையும் பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரித்ததில் இந்த சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுகிறது என்பது போன்ற தகவல்கள் கிடைத்தன.
வழக்கில் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் 506(2) பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டும் குற்றவாளிகளான 45 வயது ராஜாவும், 24 வயது வேலுமணியும் கைது செய்யப்பட்ட இரண்டாவது நாளிலேயே ஜாமீனில் விடுவிக்கப்பட்ட கொடுமையும் நடை பெற்றுள்ளது. எனவே கட்சியின் சார்பில் சனிக்கிழமை யன்றே கள்ளக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளரை சந்தித்து இச்சம்பவங்க ளில் ஈடுபட்டவர்களை கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்தும், இதில் தொடர்புடைய காவல் துறையினர் உள்ளிட்ட பிற குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும் என கூறினர். இன்றைய சமூகத்தில் பெண்களுக்கு பல்வேறு அநீதிகள் இழைக்கப்படும் பின்னணியில் பாலியல் வன்கொடுமைகள் சம்பந்தமான காவல்துறை விசாரணை என்பது பாதிக்கப்பட்ட பெண்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படாமல் தேவையான அளவு முன்னெச்சரிக்கையுடன் நடத்தப்பட வேண்டும் எனவும் மனுவாக அளித்து வலியுறுத்த ப்பட்டது.
ஆனால் காவல் துறையின் தரப்பில் “இது தனிநபரின் தவறான செயல்பாடாகும். இதுதவிர பெரிய அளவிற்கு பொள்ளாச்சி சம்பவம் போல் கள்ளக்குறிச்சி நகரில் நடை பெறவில்லை, அதற்கான ஆதாரங்கள் ஏதும் கிடைத்து எங்களுக்கு கூறினால் அதன் மீது நாங்கள் உரிய நடவடிக்கை எடுப்போம், வந்த புகாருக்குரிய அளவிற்கு உரிய வகையில் உரிய பிரிவுகளின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளதால் மேற்கொண்டு இதில் நாங்கள் நடவடிக்கை எடுக்க இயலாது” என்று கைவிரித்த செயல்தான் நடைபெற்றது. காவல்துறைக்கு உள்ள முக்கிய கடமைகளில் ஒன்று குற்றச் செயல்கள் நடைபெறுவதற்கு முன் அதனை தடுப்பது. இதற்காகத் தான் தனிப்பிரிவு காவலர்கள், புலனாய்வுப் பிரிவு, கணக்கிலடங்கா அதிகாரங்கள் என காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கிருந்து இப்படிப்பட்ட பொறுப்பற்ற பதில் கிடைப்பது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. இதில் மற்றொரு தகவலும் உலா வருகிறது. வரும் 28 ஆம் தேதி தமிழக சட்டமன்றம் கூடவுள்ள நிலையில் காவல் துறைக்கு பொறுப்பாக உள்ள முதலமைச்சருக்கு சங்கடம் வரக்கூடாதென மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சனையை பெரிதாகாமல் முடித்துவிட வேண்டும் என மேற்கொண்ட முயற்சியின் பலனாகவே இந்த பெண் வன்கொடுமை பிரச்சனை சாதாரணமான பிரச்சனையாக மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் கொடுக்கப்பட்ட மனுவில் உள்ள கோரிக்கை களை வலியுறுத்தி கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.வாலண்டினா, ஜி.ஆனந்தன், விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை ஆகியோர் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு நடைபெறுகிறது. இதற்கான அனுமதி கோரியும் காவல்துறை யிடம் உரிய வகையில் மனு அளிக்கப்பட்டு ள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இப்படிப் பட்ட சமூக அநீதிகளுக்கு எதிராக இடைவிடாமல் போராட்டங் களை தொடர்ந்து எடுத்துச் செல்லும். பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க இறுதிவரை போராடும்.
மு.சிவக்குமார்.