tamilnadu

img

சென்னை ஐஐடியில் சாதியப் பாகுபாட்டைக் கண்டித்து நாளை மாநிலம் முழுவதும் போராட்டம்....

சென்னை:
சென்னை ஐஐடி உயர்கல்வி நிறுவனத்தில் தலைவிரித்தாடும் சாதியப் பாகுபாடு மற்றும் இட ஒதுக்கீடு மீறல்கள், பேராசிரியர்கள் மாணவர்கள் மீது தொடரும் சாதிக்கொடுமைகள் ஆகியவற்றைக் கண்டித்து ஜூலை 5 ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்புமுன்னணியின் பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ், திராவிடர் விடுதலைக் கழகத்தின் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கோவை. ராமகிருஷ்ணன், ஆதித்தமிழர் பேரவையின் இரா.அதியமான், ஆதித்தமிழர் கட்சியின் கு.ஜக்கையன், தமிழ்ப்புலிகள் கட்சியின் நாகை. திருவள்ளுவன், ஐந்திணை மக்கள் கட்சியின் வை. தேவதாசு, திராவிடர் தமிழர் கட்சியின் வெண்மணி ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:சென்னை உள்ளிட்ட இந்தியாவின் ஏறக்குறைய அனைத்து ஐ. ஐ. டி களிலும் இடஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்துவதில்லை. ஆராய்ச்சி, முனைவர் படிப்புகளில் மிக மோசமாக இட ஒதுக்கீடுகள் மீறப்படுவதை நிறைய ஆய்வுகள், ஆர். டி. ஐ பதில்கள், மிக அண்மையில் நாடாளுமன்றத்தில் மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் எழுப்பிய கேள்விகளுக்கான பதில்கள் அம்பலப்படுத்தியுள்ளன.  இந்த தடைகளை எல்லாம் மீறி பேராசிரியர்களாக, மாணவர்களாக ஐ. ஐ. டி க்குள் வருபவர்களை உயர்சாதிஆதிக்கம் நிழல் போல் துரத்தி துன்புறுத்துகிறது.

இதன் தொடர்ச்சியாகவே சென்னை ஐ. ஐ. டி உதவிப் பேராசிரியர் விபின்  பணி விலகல்கடிதம் கொடுத்திருக்கிறார். இதற்கெல்லாம் தீர்வு காண்பதற்கு மாறாக இந்திய ஒன்றிய கல்வி அமைச்சகம்  அமைத்த  குழு ஐ.ஐ.டி ஆசிரியர் நியமனத்தில் இட ஒதுக்கீடே வேண்டாம் எனப் பரிந்துரைத்துள்ளது.இத்தகைய அநீதிக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் ஒருங்கிணைந்து தமிழ்நாடு முழுவதும் ஜூலை 5 திங்கள்கிழமையன்று கூட்டாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திடவுள்ளன. சமூகநீதிக்கான சமரில் தமிழ்நாடு மக்கள் கரம் இணைத்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

;