மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு திங்களன்று (செப்.23) சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தோழர் சீத்தாராம் யெச்சூரி உருவப்படத்தை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் டாக்டர் அசோக் தாவ்லே திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழஞ்சலி உரை நிகழ்த்தினார். திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கு. செல்வப்பெருந்தகை எம்எல்ஏ, மூத்த பத்திரிகையாளர் என். ராம், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., சிபிஐ(எம்) மூத்தத் தலைவர் டி.கே. ரங்கராஜன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், சிபிஐ மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., சிபிஐ (எம்.எல்) லிபரேசன் மாநிலச் செயலாளர் பழ. ஆசைத்தம்பி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்எல்ஏ., சிபிஐ(எம்)மத்தியக்குழு உறுப்பினர்கள், பி. சம்பத், உ. வாசுகி உள்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.