தோழர் சடையாண்டி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கட்சியின் மாநில செயற்குழு சார்பில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள செய்தி:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் சடையாண்டி அகால மரணமடைந்தார் என்கிற செய்தி மிகுந்த துயரளிக்கக்கூடியது. இவர் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். அங்கு பணியாற்றிக் கொண்டிருக்கும் போது பல இளம் தோழர்களை சங்கத்திற்கும், சங்கத்தின் தலைமை பொறுப்பிற்கும் கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றியவர். போக்குவரத்துக் கழக பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும், மzகள் பணிக்காக இடையறாது தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். தேனி தாலுகா செயலாளராக மக்களுடன் ஒன்றிணைந்து சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருந்தவர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவராகவும் சிறப்பாக பணியாற்றியவர். போராட்ட குணமும், தலைமை சிறப்பும், அரவணைத்து செல்லும் பாங்கும் கொண்ட தோழர் சடையாண்டியின் இறப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பேரிழப்பாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தனது அஞ்சலியை உரித்தாக்குகிறது. அவரது இழப்பால் துயருற்றிருக்கும்அவரது குடும்பத்தாருக்கும், தோழர்களுக்கும் மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.