tamilnadu

img

தொண்டால் பொழுதளந்த தூயவர் தோழர் ஏ.நல்லசிவன் நூற்றாண்டு துவக்கம்....

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர்களில் ஒருவரான தோழர் ஏ.நல்லசிவன் 1922 பிப்ரவரி 22 அன்று நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம்  பிரம்மதேசம் கிராமத்தில் பிறந்தவர். அவரது நூற்றாண்டு 2021 பிப்ரவரி 22 அன்று துவங்கியது. இதையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு கட்சியின் தலைவர்கள் செவ்வணக்கம் செலுத்தினர். 1997ல் தோழர் ஏ.நல்லசிவனை நினைவுகூர்ந்து, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் 
வாழும் வரலாறு என்.சங்கரய்யா எழுதிய குறிப்பு இங்கு தரப்படுகிறது. 

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவில் தேச விடுதலை இயக்கத்தினால் கவரப்பட்ட தோழர் ஏ.நல்லசிவன் படிப்படியாக கம்யூனிஸ்ட்டாக பரிணமித்து அந்த மாவட்டத்தின் கட்சி, தொழிற்சங்க இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவராக நீண்டகாலம் பணியாற்றினார்.விக்கிரமசிங்கபுரத்தில் பஞ்சாலை தொழிலாளர் சங்கப் பணி அவருக்கு பெரும் அனுபவத்தைக் கொடுத்து இரவு பகல் பாராமல் அந்தச் சங்க அலுவலகத்திலேயே தங்கி தொழிலாளர்களின் குறைகளைக் கேட்டறிந்து, அவர்களது குறைகளை மனுக்களாக எழுதிக் கொடுப்பது முதல் சகல நிர்வாகப் பணிகளையும் அவர் திறம்பட நடத்தினார். எந்தவொரு சிறு வேலையாக இருந்தாலும் அதனை மிகுந்த கவனத்தோடு செயல்படுத்தும் தன்மை அவரிடம் இருந்தது.

அதேபோல அந்த இயக்கத்தின் பொழுது கொடுமையான அடக்குமுறைகளை அவர் சந்திக்க நேர்ந்தது. கொலை வழக்கு, சதி வழக்கு போன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு நீண்டகாலம் சிறையில் இருந்தார். அவர் தனது பொது வாழ்வில் மொத்தம் ஐந்தே முக்கால் ஆண்டு கால சிறை வாழ்க்கையும், மூன்றரை ஆண்டு காலம் தலைமறைவு வாழ்க்கையும் அனுபவித்துள்ளார்.மாநில தொழிற்சங்க பொறுப்புகளை மேற்கொண்டபின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பல்வேறு தொழில்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் பிரச்சனைகளில் அவர் கவனம் செலுத்தினார். அந்த தொழில்களில் உள்ள பிரச்சனைகளை மேலெழுந்தவாரியாக பார்க்காமல் ஆழமாக அணுகி ஆராய்ந்து அதற்கேற்ற தொழிற்சங்க நடைமுறைகளை பல்வேறு சங்கங்களுக்கும் அவர் வகுத்துக் கொடுத்தார். இதன் மூலம் அவர் அகில இந்திய தொழிற்சங்க இயக்கத்திலும் தன் முத்திரையைப் பதித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாநிலச் செயலாளராக நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டு நீண்டகாலம் சிறப்பான சேவை புரிந்தார். கட்சியின் அடிப்படை கோட்பாடுகளில் விட்டுக் கொடுக்காத தன்மையை அவர் கடைப்பிடித்தார். அதே நேரத்தில் சாதாரண பிரச்சனைகளில் நெளிவு சுழிவான நடைமுறைப் போக்கை அனுசரித்தார்.நடைபெறக் கூடிய விவாதங்களில் அனைவரது கருத்துக்களையும் பொறுமையாக கேட்டறிந்தபின் தனது கருத்துக்களை தெரிவிப்பார். மற்றவர்கள் கூறுகிற கருத்துக்களில் உண்மை இருக்கிறது என்று தெரிந்தால் அதை ஏற்றுக் கொள்ளவும் தயங்கமாட்டார். விவாதங்களில் கடுமையாக பங்கெடுத்தாலும் கூட்டம் முடிந்தபின்பு மிகுந்த தோழமையுடன் அவர் தோழர்களிடம் பழகினார்.
ஏராளமான புத்தகங்களைப் படிக்கும் சிறந்த பண்பினை அவர் கொண்டிருந்தார். பணிச்சுமை காரணமாக பத்திரிகைகளை படிக்க முடியாமல் போனால் தனது பையில் அனைத்துப் பத்திரிகைகளையும் மடித்து வைத்திருந்து பயணங்களின்போது அவற்றை படித்து முடிக்கும் பழக்கத்தை அவர் கொண்டிருந்தார்.

ஒரு சிறந்த கம்யூனிஸ்ட்டுக்குரிய இயல்பான குணங்களினால் தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சரியான ஸ்தாபன கோட்பாடுகளின் அடிப்படையில் கட்டி வளர்ப்பதில் பெரும் பங்கு வகித்தார். சட்டமன்ற மேலவையிலும் நாடாளுமன்ற மாநிலங்களவையிலும் அவர் பணியாற்றிய போது தமிழகத்தின் பிரச்சனைகளை ஆழ்ந்து கவனித்து அதை மன்றங்களில் எடுத்துரைத்தார்.வாச்சாத்தி பிரச்சனையை மக்களுடைய கவனத்திற்கு கொண்டு வருவதிலும் அந்த மக்களுக்கு நீதி கிடைக்கவும் அவர் தொடர்ந்து நடவடிக்கை எடுத்தார். அதேபோன்று தமிழில் தந்தி வசதியை கொண்டு வர அவர் எடுத்த சிறப்பான முயற்சிகளை அனைவரும் பாராட்டினர்.

கட்சியின் சார்பிலும், தொழிற்சங்கத்தின் சார்பிலும் பலமுறை அவர் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டார். தனது பயண அனுபவங்களை பத்திரிகைகளிலும், நூல் வடிவாகவும் வெளியிட்டுள்ளார்.கட்சியிலும் தொழிற்சங்கத்திலும் எத்தனையோ பொறுப்புகளை வகித்து வந்த போதிலும் மிகுந்த எளிமையான ஒரு வாழ்க்கையை கடைசி வரை வாழ்ந்து வந்தார். அவருடைய தன்னடக்கம் அனைத்து கம்யூனிஸ்ட்டுகளும், பொதுநல ஊழியர்களும் பின்பற்றத்தக்கதாகும். 1940ல் கட்சியில் சேர்ந்த அவர் 1997ம் ஆண்டில் காலமாகும் வரை 57 ஆண்டுகள் உழைக்கும் மக்களுக்கும், இடதுசாரி இயக்கத்திற்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஆற்றியுள்ள அரும்பணிகள் இளைய தலைமுறையினருக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக என்றென்றும் விளங்கும்.

;