tamilnadu

சிதம்பரம் கோவில் வரவு-செலவு தாக்கல் செய்திடுக! தீட்சிதர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, செப்.5- சிதம்பரம் நடராஜர் கோவில், தீட்சிதர்கள்  கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு, 2014 முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான வருமானம், செலவுகள் குறித்த கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவிலுக்கு  பல்வேறு நாடு களில் இருந்தும் இந்தியாவின் பல்வேறு  மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக் கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கோவிலில் பல்வேறு முறை கேடுகள் நடை பெறுவதாக வந்த தகவலின் பெயரில் கடந்த 2008 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை கோவிலை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீட்சிதர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோவில் 2008 ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்தபோது 3 கோடி ரூபாய்க்கு மேல்  வருவாய் ஈட்டியது. தீட்சிதர்கள் கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் மட்டுமே வருமானம் வரு வதால் கோவிலின் வருவாய் கணக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது, இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான அரசு சிறப்பு பிளீடர் அருண் நடராஜன், கோயில் நிர்வாகம் தீட்சிதர்கள் வசம் ஒப்படைக்கப்பட்ட பின் பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை கோவில் கணக்கில் செலுத்தாமல் தீட்சி தர்கள் எடுத்துச் செல்வதாக குற்றம்சாட்டி னார்.

தீட்சிதர்களின் தவறான நிர்வாகம் காரணமாக கோவில் வருமானம் பெரு மளவு குறைந்து விட்டதால், தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் உள்ள காலத்தில் வந்த வருமானம் குறித்த கணக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரினார்.

பொது தீட்சிதர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோவில் இருந்தபோது, பக்தர்கள் காணிக்கை செலுத்த உண்டியல் வைக்கப்பட்டிருந்தது. பூஜைகள், அர்ச்சனை, தரிசனத்துக்கு டிக்கெட் அடித்து கட்டணம் வசூலிக்கப்பட்டது. அதன் காரணமாகவே அதிக வருவாய் கிடைத்தது என்று தெரிவித்தார்.

 தீட்சிதர்கள் கட்டுப்பாட்டுக்கு ‘கோவில் வந்த பிறகு உண்டியல் அகற்றப்பட்டு விட்டது. பூஜை, அர்ச்சனை மற்றும் தரி சனத்திற்கு எந்த கட்டணமும் வசூலிக்கப் படுவதில்லை என்றும் குறிப்பிட்டார்.

மேலும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை தீட்சிதர்கள் எடுத்துச் செல்வதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து கூடுதல் பதில் மனு தாக்கல் செய்ய  அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஐந்தாம் நூற்றாண்டில் சோழர் களால் 44 ஏக்கர் பரப்பில் கட்டப்பட்டுள்ள சிதம்பரம் நடராஜர் கோவில் மிகவும் பழமை யானது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் நடராஜரை தரிசிக்க வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். புராதன  கட்டி டமான கோவிலை முறையாக பராமரிக்க வேண்டும். அதற்கு பெருந்தொகை தேவைப்படுகிறது எனச் சுட்டிக் காட்டினர்.

 செப்.19 இல் செலவு கணக்கை  தாக்கல் செய்திடுக! 

சிதம்பரம் கோவில் பராமரிப்புக்கும் பக்தர்களுக்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கவும் என்ன வருவாய் ஆதாரம் உள்ளது. கோவில் காணிக்கை தவிர தீட்சி தர்களுக்கு வேறு வருவாய் ஆதாரங்கள் உள்ளதா? என கேள்வி எழுப்பிய நீதிபதி கள், சிதம்பரம் நடராஜர் கோவிலில் உண்டி யல் எப்போது அகற்றப்பட்டது? பூஜை, அர்ச்சனை, தரிசனத்திற்கு கட்டணங்கள் வசூலிக்கப்படுவது இல்லையா என்பது குறித்து மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும் ஒவ்வொரு ஆண்டும் தீட்சிதர்கள் தரப்பில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்படுகிறதா ? என்பது  குறித்தும் தெரிவிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், தீட்சிதர்கள் கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு 2014- 15 முதல் 2023-24 ஆம்  ஆண்டுகள் வரையிலான வருமான செலவு குறித்த கணக்கு புத்தகங்களை செப்டம்பர் 19ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.