செங்கல்பட்டு: 21 பேருக்கு தொற்று
செங்கல்பட்டு மாவட்டத்தில் புதனன்று (மே 13) மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் உயிரிழந்துள்ளார். அந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 412ஆக உள்ளது. 66 பேர் குணமடைந்துள்ளனர். 5 பேர் உயரிழந்துள்ளனர். 340 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தி.மலை: 19 பேருக்கு கொரோனா
திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 124ஆக அதிகரித்துள்ளது.
உயரும் தண்டையார்பேட்டை
சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்தில் மேலும் 27 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தண்டையார்பேட்டையில் ஏற்கனவே 362 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் தொற்று பாதிப்பு உயர்ந்துக் கொண்டு வருகிறது.
கண்ணகி நகரில் மேலும் 6 தொற்று
சென்னை கண்ணகிநகரில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
60 வயது முதியவர் உயிரிழப்பு
தேனாம்பேட்டை தனியார் மருத்துவமனையில் வங்கதேசத்தை சேர்ந்த 60வயது முதியவர் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புதுச்சேரியில் மேலும் ஒருவர்
தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 36 வயது ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்: 3 பேருக்கு கொரோனா
காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதன்கிழமையன்று (மே 13) குன்றத்தூர் பகுதியில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 159 ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிராவில் சிக்கிய தமிழர்கள்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மணிகல், புளியம்பட்டி, கருங்காலிப்பட்டி, மேல் புழுதியூர் உள்ளிட்ட கிராமங்களிலிருந்து 112 பேர் மகாராஷ்டிர மாநிலம், பால்கர் மாவட்டம் வசாய் மற்றும் நாலாசோப்பாரா ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் கூலி வேலை செய்வதற்காக சென்றுள்ளனர். ஊரடங்கால் திருவண்ணாலைக்கு திரும்ப முடியாமல் உள்ளனர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களது உறவினர்கள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.