சென்னை,மார்ச் 1 சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் ரஞ்சித் (42). இவருக்குச் சொந்தமான ரசாயனக் கிடங்கு மாதவரம் 200 அடி சாலையில் உள்ளது. இந்த கிடங்கில் கொரியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் படும் ரசாயனப் பொருள்களைக் கொண்டு வந்து வைத்துள்ளனர். இந்நிலையில், இக்கிடங்கில் இருந்து சனிக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மாதவரம், செங்குன்றம், அம்பத்தூர் ஆவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான தீயணைப்பு வாகனங்கள் மூலம் 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஞாயிற்றுக்கிழமை தான் தீ அணைக்கப்பட்டது. இத் தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாயின. மேலும், கிடங்கின் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மற்றும் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. ரசாயனக் கிடங்கு என்பதால் தீ விபத்தில் அப்பகுதியினருக்கு கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.இந்த விபத்து குறித்து மாதவரம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.