திருவண்ணாமலை, ஜுலை 10- திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்துள்ள அரசுப் பள்ளியில் ஏற்பட்ட சாதிக்கலவரத்தில் பள்ளி ஆசிரியர் தாக்கப்பட்டார். வணிக நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஆதமங்கலம் புதூர் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் ஆசிரியர்கள் மற்றும் தலைமை அசிரியர்களுக்கிடையே, சாதிக்கலவரம் ஏற்பட்டுள்ளது. செவ்வாயன்று ஏற்பட்ட கலவரத்தில், பள்ளிக்கு வெளியே உள்ள சில நபர்கள் மாணவர்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட வைத்ததாகக் கூறப்படுகிறது. இந்த கலவரத்தின் போது பள்ளி ஆசிரியர் ஒருவரை வெளி நபர் ஒருவர் உள்ளே சென்று கடுமையாக தாக்கியுள்ளார். மேலும் ஆதமங்கலம் புதூர் பகுதி கடைவீதியில் இருந்த வணிக நிறுவனம் ஒன்றையும் அடித்து நொறுக்கியுள்ளனர். இதை தொடர்ந்து முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சாதிக்கலவரத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.