புதுதில்லி, மார்ச் 3 - கடந்த 2023 நவம்பரில் உத்தர்கண்ட் மாநிலத்தில் சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கிக்கொண்ட 41 தொழிலாளர்களை, எலி வளை சுரங்கத் தொழிலாளர்கள் தங்களின் தீவிர முயற்சி காரணமாக உயிரோடு மீட்டுக் கொடுத்தனர். மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் மீட்புப் பணியில் ஈடுபட்ட அந்த எலிவளை தொழிலாளர்களில் ஒருவரான ‘வக்கில் ஹசன்’ என்பவரின் வீட்டினை ஒன்றிய அரசு தற்போது இடித்துத் தரைமட்டமாக்கி யுள்ளது. இதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டு மேடையும் தனது வலுவான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்தியத் தொழிற்சங்கங் களின் கூட்டுமேடை அறிக்கையில் கூறப்பட்டி ருப்பதாவது:
மனிதாபிமானமற்ற பழிவாங்கல் நடவடிக்கை
சுரங்கப்பாதையில் சிக்கிக்கொண்ட 41 தொழிலாளர்களை, வக்கில் ஹசன் தன் ‘எலி வளை’ சுரங்கத் தொழிலாளர்கள் குழு வின் மூலமாக, உயிருடன் மீட்டார். இதற்குப் பழிவாங்கும் முறையில் மனிதாபிமானமற்ற முறையில் மிகவும் கொடூரமாக ஒன்றிய அர சாங்கத்தின் கீழ் இயங்கிடும் தில்லி மேம்பாட்டு ஆணையம் நடந்துகொண்டுள்ளது. வக்கில் ஹசன் வீட்டை புல்டோசர் மூலம் இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளது. சுரங்கப் பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழி லாளர்கள் சுற்றியிருந்த பாதைகள் அடைக்க ப்பட்டு சுரங்கத்திற்குள் சிக்கிக்கொண்டபின் அவர்களை மீட்க அரசால் நவீன எந்திரங்கள் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தோல்வியடைந்தபின், வக்கில் ஹசன் தலைமையிலான ‘எலி வளை’ குழு அவர்களை எவ்வித உயிர் சேதமுமின்றி மீட்டது. இதற்காக வக்கில் ஹசன் குழுவிற்கு நாடு முழுதுமிருந்து பாராட்டுகள் குவிந்தன.
ஹசன் வீட்டை மட்டும் குறிவைத்தது ஏன்?
வக்கில் ஹசன் குடியிருக்கும் பகுதியில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்துவந்தபோதிலும், ஒன்றிய அரசின் தில்லி மேம்பாட்டு ஆணையமானது வக்கில் ஹசன் வீட்டை மட்டும் குறிவைத்து இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளது. அவருடைய மூன்று சின்னஞ்சிறு குழந்தைகள் உட்பட குடும்பத்தின ரை, வீதியில் நிறுத்தியுள்ளது. இவ்வாறு அவர் வீடு இடிக்கப்பட இருப்பது தொடர்பாக அவருக்கு முன்கூட்டியே எவ்விதமான நோட்டீஸ் எதுவும் வழங்கப்படவில்லை. ஒன்றிய அரசின் இந்த செயலை மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை கண்டிக் கிறது. இவ்வாறு பழிவாங்கும் நோக்குடன் வக்கில் ஹசன் வீடு இடிக்கப்பட்டதற்கான கார ணத்தை ஒன்றிய அரசாங்கமும், தில்லி மேம்பாட்டு ஆணையமும், அதன் தலைவ ராக இருக்கும் துணை ஆளுநரும் பொது வெளி யில் விளக்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.
மாற்றுக் குடியிருப்பை உடனே வழங்க வேண்டும்
வக்கில் ஹசனுக்கு, மத்தியத் தொழிற்சங் கங்களின் கூட்டு மேடையானது தமது ஒரு மைப்பாட்டையும் ஆதரவையும் தெரிவிக்கும் அதேநேரத்தில், தில்லி மேம்பாட்டு ஆணைய மும், ஒன்றிய அரசாங்கமும் உடனடியாக எவ்வித தாமதமுமின்றி மாற்றுக் குடியிருப்பு வசதிகளை வக்கில் ஹசனுக்கு செய்து தர வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது. ஒன்றிய அரசாங்கம் மற்றும் தில்லி மேம்பாட்டு ஆணையத்தின் இத்தகைய மக்கள் விரோத, மனிதாபிமானமற்ற, பழிவாங்கும் செயலுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்புமாறு அனைத்து உழைக்கும் மக்களை யும், அவர்கள் சார்ந்திருக்கும் தொழிற்சங்கங் களையும் கூட்டுமேடை அறைகூவி அழைக்கிறது. இவ்வாறு மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை அறிக்கையில் கோரியுள்ளது. (ந.நி.)