சென்னை:
கோவையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை விமர்சித்து பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது. இச் சுவரொட்டியை கிழித்த திமுக இளைஞர் அணியை சேர்ந்த 12 பேர் கைது செய்யப் பட்டனர். இதனை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்தநிலையில், ரேஸ்கோர்ஸ் காவல் துறையினர் 144 தடை உத்தரவை மீறி அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக ஒன்று கூடுதல், போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறுகளை ஏற்படுத்துதல், கொரோனா வைரஸ் பரவும் என்று தெரிந்தும் சமூக இடைவெளியை பின்பற்றாமலும், முக கவசம் அணியாமலும் செயல் பட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தி.மு.க இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாவட்ட பொறுப்பாளர்கள் கார்த்திக் எம்.எல்.ஏ., பையா கவுண்டர், சுந்தரம் எம்.பி., உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.நீட் தேர்வு எழுதும் கிராமப்புற மாணவர்களிடம் மாநில அரசுக்கு எதிராக பொது அமைதியை குலைக்கும் எண்ணத்திலும், விளைவை தூண்டும் விதத்தில் பேசியதாக உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.