அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 250 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் நேற்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.
முன்னதாக அதிமுக சார்பில் கூட்டத்திற்கு அனுமதி கேட்டு காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் காவல்துறை அனுமதி வழங்கவில்லை.
எனினும், நேற்று ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் அதிகளவில் அதிமுக தலைமை அலுவலகத்தில்கூடி மாறி மாறி கோஷங்களை எழுப்பினர்.
இதனைத்தொடர்ந்து, பொதுமுடக்க விதிகளை மீறியதாகக்கூறி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தலைமை நிலையச் செயலாளர் மகாலிங்கம் உள்பட 250 பேர் மீது ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சட்டவிரோதமாக கூடுதல், அரசு உத்தரவை மீறுதல், உயிருக்கு ஆபத்தான தொற்றுநோய் பரப்பக்கூடிய வகையிலான செயலில் ஈடுபடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.