tamilnadu

img

கன்னலம் அங்கன்வாடி திறக்கப்படுமா?

விழுப்புரம், ஜூலை 13- விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டத்திற்குட்பட்ட கன்னலம் கிராமத்தில் கடந்த பல ஆண்டுகளாக பழைய கட்டிடத்தில் குழந்தைகள் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அங்கன்வாடி மைய புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு இதுவரை திறக்கப்படவில்லை. இதனால் ஆபத்தான நிலையில் உள்ள பழைய அங்கன்வாடி மைய கட்டிடத்திற்கே குழந்தைகள் செல்லும் நிலை உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த சிறுமழைக்கே பழைய அங்கன்வாடி கட்டிடத்தில் தண்ணீர் தேங்கியதால் குழந்தைகள் அமர முடியாத நிலை ஏற்பட்டது. எனவே ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன் மாவட்ட நிர்வாகம் புதிய  அங்கன்வாடி கட்டிடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.