tamilnadu

வாழ்வதற்குத்தான் தொழிலே தவிர சாவதற்கு அல்ல!

பட்டாசுத் தொழில், வெடி விபத்து பாதிப்பு, பட்டாசுத்தொழிலாளர்களின் பொருளாதார நிலைமைகள் குறித்து, விருதுநகர் மாவட்ட தீப்பெட்டி பட்டாசுத் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) விரிவான ஆய்வு நடத்தி ஆகஸ்ட் 25 அன்று சிவகாசியில் நடைபெற்ற சிறப்பு மாநாட்டில் வெளியிட்டது. வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினரிடம் நடத்திய ஆய்வில் அதிர்ச்சிகரமான பல விவரங்கள் தெரியவந்தன.

வான் வெளியில் வர்ண ஜாலங்கள், குழந்தைகளின் குதூகலங்கள், பண்டிகைகள், திருவிழாக்கள், திரு மணங்கள், இறப்பு, தலைவர்கள் வரவேற்பு, கட்சிகளின் மாநாடுகள் -இவற்றில் பிரிக்க முடியாதது பட்டாசு. 

1923ஆம் ஆண்டு சிறிய அளவில் துவக்கப்பட்ட தீப்பெட்டி, பட்டாசுத் தொழில் நூற்றாண்டைக் கடந்து இன்று விருதுநகர் மாவட்டத்தின் பொருளாதார சுழற்சியில் முக்கிய பங்காற்றுகிறது. மாவட்டத்தில் செயல்படும் 1024 பட்டாசு ஆலைகளில் 741 ஆலைகள் மத்திய அரசின் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் உரிமம் பெற்றும், 283 ஆலைகள் மாவட்ட வருவாய் துறையின் உரிமம் பெற்றும் இயங்குகின்றன. லட்சக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் பட்டாசுத் தொழில் அதில் பணிபுரியும் தொழிலாளர்கள் பலருக்கு வேதனை தருவதாக உள்ளது. அடிக்கடி விபத்துகள் நடப்பதால் ஏற்படும் உயிரிழப்புகளின் சோகங்கள் சொல்லி மாளாது.

341 விபத்துகள்

கடந்த 15 ஆண்டுகளில் 341 ஆலைகளில் ஏற்பட்ட விபத்துகளில் 383 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். 2024 ஜனவரி முதல் கடந்த 7 மாதங்களில் மட்டும் 13 ஆலைகளில் நடந்த விபத்துகளில் 35 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் விபத்துகளில் உயிரிழந்தோரின் குடும்ப உறுப்பினர்கள், விபத்தில் நேரடியாக பாதிக்கப்பட்டு காயமடைந்த தொழிலாளர்கள், கடுமையான நெருக்கடிகளுக்கு இடையில் தற்போது வேலை செய்து  வரும் தொழிலாளர்கள் என மூன்று விதமான தொழி லாளர்களிடம் கள ஆய்வு நடத்தப்பட்டது. 2024 ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் கிடைத்த விபரங்கள் வருமாறு:

26 ஆலைகளில் நடந்த வெடி விபத்துகளில் உயிரிழந்த 25 பெண்கள் 51 ஆண்கள் என மொத்தம் 76 பேரின் குடும்பங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.

விபத்து நடந்த போது உயிரிழந்தோரின் வயது

60 வயதிற்கு மேல் 2 பேர்
51க்கும் 60க்கும் இடையில் 5 பேர்
31க்கும் 50க்கும் இடையில் 47 பேர் 
21க்கும் 30க்கும் இடையில் 22 பேர்

விபத்துகளில் உயிரிழந்தவர்களில் சரிபாதி பேர் 40 வயதிற்கு உட்பட்டவர்களாகவே உள்ளனர். கணவனை இழந்த மனைவி, மனைவியை இழந்த கணவன், பெற்றோரை இழந்த குழந்தைகள், பிள்ளைகளை இழந்த பெற்றோர் என ஒவ்வொரு குடும்பத்திலும் தாங்க முடியாத கண்ணீர் கதைகள். சமீபத்தில் நடந்த இரு வெடி விபத்துகளில் சிவகாசி வட்டம் - மத்தியசேனை, வத்திராயிருப்பு வட்டம் அழகாபுரியிலும் தாய், தந்தை இருவரையும் இழந்த குழந்தைகள் உறவினர்களின் அரவணைப்பில் வாழ்கின்ற சோகம்.

2024 ஆகஸ்ட் 14ஆம் தேதி திருவில்லிபுத்தூர் வட்டம் மாயத்தேவன்பட்டி பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் இறந்து போன தொழிலாளிக்கு பிறந்து ஒரு மாதமே ஆன இரட்டை குழந்தைகள் தந்தையின் முகமே பாராமல் வளர வேண்டிய அவலம்.

இன்னும் இது போன்ற ஏராளமான சுமைகளோடும், சோகங்களோடும் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்ப நிலைமைகளை பார்க்க முடிகிறது.

2000ஆம் ஆண்டிலிருந்து 2024ம் ஆண்டு வரையில் கடந்த 25 ஆண்டுகளில் நடந்த விபத்துகளில் உயிரிழந்த 76 குடும்பங்களில். 2000-2015-ஆம் ஆண்டு களுக்கிடையில் நடந்த விபத்தில் உயிரிழந்த 23 தொழி லாளர் குடும்பங்களிலும்; 2016-2020 ஆண்டு களுக்கிடையில் 18 பேர்; 2021-2022 ஆண்டுகளுக்கிடை யில் 11 பேர்; 2023-2024 ஆகிய இரு ஆண்டுகளில் 24 பேர் என்ற அளவில் ஆய்வு செய்யப்பட்டது.

உயிரிழந்தவர்களின் குழந்தைகள் 39 பேர் படிக்கின்ற னர். பள்ளிக்கல்வி 25 பேர், உயர்கல்வி 14 பேர்

76 பேரின் குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை

1 முதல் 3 பேர் வரை 36
4 முதல் 6 பேர் வரை 37
7 முதல் 9 பேர் வரை 7

வருங்கால வைப்பு நிதி மற்றும் இஎஸ்ஐ பிடித்தம் செய்யப்பட்டோர் எண்ணிக்கை 28 பேர் மட்டுமே. மீதமுள்ள 43 பேருக்கு இல்லை.

விபத்தில் குடும்பத்தில் ஒருவரை இழந்து விட்ட போதிலும் கூட வேறு வேலை வாய்ப்பு இல்லாத நிலையில் உயிரிழந்த 76 குடும்பங்களில் 42 பேர் தற்போதும் பட்டாசு ஆலையில் வேலை செய்கின்றனர்.

உறவை இழந்த துயர் மிகுந்த தொழிலாளர்களின் அன்றாட அவல வாழ்க்கை. வேலை பார்த்துக் கொண்டிருந்த கணவன் கண்முன்னே கரிக்கட்டையாய் மரித்துப் போன அதே இடத்தில் அன்றாடம் வேலை செய்வது எவ்வளவு கொடுமையானது!

இழப்பீடு

20 ஆண்டுகளுக்கு முன்னால் பட்டாசு விபத்தில் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு எவ்வித இழப்பீடும் இல்லாத நிலையே இருந்தது. நல்லடக்க செலவுக்காக ரூ.10,000 மட்டுமே கொடுத்து வந்த நிலையில் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு ஆலை நிர்வாகம் இழப்பீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தி சிவகாசி அரசு மருத்துவமனையில் உடலை வாங்க மறுத்து உறவினர்களோடு சிஐடியு பட்டாசு - தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்கம் நடத்திய போராட்டத்தி னால் முதன் முதலில் ரூ.50,000 இழப்பீடுவழங்கப்பட்டது.

தொடர்ச்சியாக இவ்வாறான போராட்டங்களின் மூலம் ஒரு லட்சத்தில் துவங்கி தற்போது சில ஆண்டுகளாக உயிரிழந்த தொழிலாளி குடும்பத்திற்கு ஆலை நிர்வாகம்  ரூ.5 லட்சம் இழப்பீடும். ரூ.50,000 நல்லடக்க செலவுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. ஆய்வு செய்த 76 குடும்பங் களில் 51 பேருக்கு மட்டுமே இழப்பீடு கிடைத்துள்ளது. 25 பேருக்கு இழப்பீடு கிடைக்கவில்லை என தெரிவித்துள்ள னர்.

இதில் ரூ.1 லட்சம் பெற்றவர்கள் 3 பேர்

ரூ.2 லட்சம் பெற்றவர்கள் 13 பேர்
ரூ.3 லட்சம் பெற்றவர்கள் 7 பேர்
ரூ.4 லட்சம் பெற்றவர்கள் 4 பேர்
ரூ.5.5 லட்சம் பெற்றவர்கள் 24 பேர்

ஒரு சில பெரிய விபத்துகளின் போது மத்திய அரசு நிதி உதவி அறிவித்தது. அதன்படி ஆய்வு செய்த 76 பேரில் 18 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப் பட்டுள்ளது. மாநில அரசும் நிவாரண நிதி அறிவிப்பு கடந்த காலங்களில் ஒரு சில விபத்துகளின் போது மட்டும் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வந்தது. அது ரூ. 1 லட்சம், ரூ 2 லட்சம் என்ற அளவில் இருந்தது.

தற்போது கடந்த 2 ஆண்டுகளில் நடந்த அனைத்து விபத்துகளின் போதும் தமிழக அரசு நிவாரண நிதி தலா ரூ.3 லட்சம் அறிவிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

அதன்படி ஆய்வு செய்த 76 குடும்பங்களில்...

21 பேருக்கு தலா ரூ.1 லட்சம்
9 பேருக்கு தலா ரூ. 2 லட்சம்
30 பேருக்கு தலா ரூ.3 லட்சம்
தமிழக அரசின் நிவாரணம் கிடைக்கப் பெற்றுள்ளனர்.
16 பேருக்கு நிவாரணம் கிடைக்கவில்லை.

வெடி விபத்து குறித்து மக்களின் கருத்து...

ஆலை நிர்வாகத்தின் கவனக்குறைவு : 24 பேர்
ஆலை நிர்வாகத்தின் விதி மீறல் : 13 பேர்
ஆலை காண்ட்ராக்ட் முறை : 4 பேர்
பேன்சி ரகங்கள் தயாரிப்பு : 3 பேர் 
தொழிலாளர்களின் கவனக்குறைவு : 12 பேர்
அவசரமாக வேலை செய்வது : 4 பேர்
தடுக்கவே முடியாது : 2 பேர்

வெடி விபத்தை தடுக்கும் வழிமுறைகள் பற்றி...

ஆலை நிர்வாகம் செய்ய வேண்டியது

1. முறையாக செயல்பட வேண்டும் : 26 பேர்
2. எக்ஸ்ட்ரா வேலை கூடாது : ஒருவர்
3. போர்மென் வேலை வாங்க வேண்டும் : 6 பேர்
4. குத்தகை கூடாது : 5 பேர்
5. குழந்தைகள் அனுமதி கூடாது : 2 பேர்
6. வெளிமாநில தொழிலாளி கூடாது : ஒருவர்
7. பித்தளை குச்சி பயன்படுத்துவது : ஒருவர்
8. ஊதிய உயர்வு தேவை : 3 பேர்
9. பதில் சொல்லாதவர்கள் : 30 பேர்

அரசு செய்ய வேண்டியது...

1. விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும் : 36 பேர் 
2. ஆலைகளை கண்காணிக்க வேண்டும் : 10 பேர்
3. மாற்று வேலை உருவாக்க வேண்டும் : 3 பேர்
4. பதில் சொல்லாதவர்கள் : 20 பேர்

நூறாண்டு கடந்த பட்டாசு தொழிலில் பல நவீன முறைகள் வந்த போதிலும் கூட தொடரும் வெடி விபத்துகளால் கொத்து கொத்தாக மனித உயிர்கள் மடிவதை தடுக்க முடியாத நிலை தொடரலாமா?

லட்சக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பு தரும் தொழிலாக பட்டாசு தொழில் இருந்த போதிலும் வாழ்வதற்குத்தான் வேலையே தவிர சாவதற்கு அல்ல.

எனவே மத்திய, மாநில அரசுகள் இத்தொழிலை முறைப்படுத்தவும். நவீனப்படுத்தவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசு பட்டாசு ஆலைகளில் விதிமுறைகளை கறாராக அமல்படுத்த வேண்டும். விதி மீறும் ஆலைகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விதிமுறைகளை கடைப்பிடிக்காத ஆலைகளை மூடி சீல் வைப்பதால் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு  ஏற்படுகிறது. இதனையும் கருத்தில் கொண்டு விதிமுறை களை அமல்படுத்த உரிய வழிமுறைகளை கையாள வேண்டும்.

பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துகள் முற்றிலும் தவிர்க்க, தடுக்க ஆலை நிர்வாகங்களும், அரசு நிர்வாகமும் கூட்டாக முயற்சி செய்ய வேண்டும்.

அனைத்து வித வேலை செய்யும் தொழிலாளர் களுக்கும் முறையான பயிற்சியும், விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும்.

குத்தகை முறை, ஒப்பந்த முறை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்.

விபத்து ஏற்பட்டு உயிரிழந்த தொழிலாளர் குடும்பத்தினருக்கு இழப்பீடாக ஆலை நிர்வாகம் ரூ. 10 லட்சம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி தமிழக அரசு ரூ.20 லட்சம் வழங்க வேண்டும்.

பட்டாசு வெடிவிபத்தை தடுப்போம்! 
மனித உயிர்களைப் பாதுகாப்போம்!