சென்னை, மே 22-வானம் மேகமூட்டத்துடன் காணப் பட்டாலும்கூட புவி பரப்பை துல்லியமாக படம் பிடிக்கும் திறன் வாய்ந்த ரிசாட்-2 பி செயற்கைக் கோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான (இஸ்ரோ) அதிநவீன செயற்கைக் கோள்களுடன் அவற்றை விண்ணில் ஏவுவதற்கான ஜிஎஸ்எல்வி மற்றும் பிஎஸ்எல்வி ராக்கெட்களையும் தயாரித்து வருகிறது. உள் நாடு மட்டுமல்லாமல் வெளி நாடுகளின் செயற்கைக் கோள்களையும் வர்த்த ரீதியாக விண்ணில் செலுத்தி வருகிறது. அந்த வகையில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக ரீசாட்- 2 என்ற செயற்கை கோளை இஸ்ரோ தயாரித்துள்ளது. இந்த செயற்கை கோளில் உயர் தொழில் நுட்பத்துடன் கூடிய அதிநவீன மேஜிங் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது ரேடார் தொழில் நுட்ப உதவியுடன் புவி பரப்பை மிகத் தெளிவாக படம்பிடித்து அனுப்பும். வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டாலும்கூட இந்த சாதனங்கள் மிகத் துல்லியமாக படம் எடுக்கும் திறன்படைத்தவையாகும். இந்த செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து புதனன்று(மே22) காலை 5.27 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. அது பூமியிலிருந்து 550 கிலோ மீட்டர் தொலைவில் புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. பேரிடர் மேலாண்மை, காடுகள் பாதுகாப்பு மற்றும் ராணுவ பயன் பாட்டுக்கு ரீசாட்-2பி செயற்கைக் கோள்பயன்படும். ரீசாட்-2பி ரேடார் செயற்கைக்கோள் 615 கிலோ எடை கொண்டது. அதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும். இதற்கான இறுதிகட்ட பணியான 25 மணி நேர ‘கவுண்ட்டவுன்’ செவ்வாயன்று (மே21) அதிகாலை 4.27 மணிக்கு தொடங்கியது. விண்வெளி ஆராய்ச்சியை மேம்படுத்துவதுடன், விண்வெளி தொடர்பான தகவல்களை பொதுமக்கள் தெரிந்துகொள்வதற்காக ராக்கெட் ஏவுவதை பார்வையிட அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் 5 ஆயிரம் பேர் அமர்ந்து பார்வையிடும் ஒரு ‘கேலரி’ அமைக்கப்பட்டிருந்தது. 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் இஸ்ரோ இணையதளத்தில் பெயர் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தனர். அதன்படி பலர் பதிவு செய்திருந்தனர். இந்த ‘கேலரி’, ஏவுதளத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. பிஎஸ்எல்வி-சி 46 ராக்கெட் ஏவுவதை பார்க்க வும் அனுமதி அளிக்க இஸ்ரோ முடிவு செய்திருந்தது. அதன்படி ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட காட்சியை ஏராளமானோர் நேரடியாக கண்டுகளித்தனர்.