tamilnadu

img

புதிய தலைமுறை செய்தியாளர் மீது கொடூரத் தாக்குதல்... கவுன்சிலர், ஊராட்சி செயலரை கைது செய்ய டியுஜே  கோரிக்கை....

சென்னை:
கும்மிடிபூண்டி ஒன்றியம் ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் செய்தி சேகரிக்கச் சென்ற புதிய தலைமுறை திருவள்ளூர் மாவட்ட  செய்தியாளர் எழில் மீது, தாக்குதல் நடத்திய ஊராட்சி செயலாளர் உட்பட  தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் (  T.U.J) கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் பிஎஸ்டி. புருஷோத்தமன் வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம் ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் தலைவராக தேர்வு செய்யப்பட்டவர் திருமதி அமிர்தம் என்ற தலித் இனத்தைச் சேர்ந்த பெண் ஆவார். கடந்த ஜனவரி 26-ஆம் தேதி நடைபெற்ற குடியரசு தின விழாவின் போது ஊராட்சித் தலைவர் அமிர்தம் அவர்களை கொடியேற்றவிடாமல் தடுத்து, ஒன்றிய கவுன்சிலர் கௌரியின் கணவர் அரிதாஸ் கொடி ஏற்றியுள்ளார்.இந்தசம்பவங்கள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  கும்மிடிப்பூண்டி வட்டச் செயலாளர் தலைமையில், ஊராட்சி தலைவர் அமிர்தத்தை அழைத்துச்சென்று ஒன்றிய ஆணையரிடம் புகார் அளித்தும் இதுநாள்வரையில் தீண்டாமையை கடைப்பிடித்து வரும் ஊராட்சி செயலர் உள்ளிட்ட, யார் மீதும் ஆணையர் நடவடிக்கை எடுக்கவில்லை.இதுகுறித்து கடந்த 16ஆம் தேதி தீக்கதிர் பத்திரிகையில் படத்துடன் விரிவான செய்தி வந்துள்ளது. இதையடுத்து உண்மை நிலைமையை அறிந்து வர புதிய தலைமுறை நிர்வாகம்  மாவட்டசெய்தியாளர்  எழில் என்பவரை அங்கு அனுப்பியுள்ளது. ஆகஸ்ட் 18 அன்று காலை10 மணிக்கு ஆத்துப்பாக்கம் சென்ற  செய்தியாளர் எழில், ஊராட்சிதலைவர் அமிர்தம் குறித்து விசாரித்து செய்தி சேகரித்துக்கொண்டு இருந்தபோது, அவரை சுற்றிவளைத்து, ஊராட்சி செயலாளர் சசிகுமார் மற்றும் கவுன்சிலர் கௌரியின் கணவர் அரிதாஸ் தலைமையில் சென்ற கும்பல் எழிலை கடுமையாகத் தாக்கி ஆத்துப்பாக்கம் ஊராட்சி அலுவலகத்தில் வைத்து பூட்டிவிட்டு அவர் செல்போனை பறித்து வைத்துள்ளனர்.

இதுகுறித்து செய்தி அறிந்த இதர பத்திரிகையாளர்கள் கும்மிடிபூண்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்ட டியுஜே செயலாளரும், தீக்கதிர் மாவட்ட நிருபருமான ரூபன் எனக்கு  தகவல் தெரிவித்திருந்தார்.  நான் உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், டிஎஸ்பி ரமேஷ்,  பொன்னேரி ஆர்டிஓ அருள் ஆகியோரிடம் பேசியதைத் தொடர்ந்து,  அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்ததன் விளைவாக எழில் மீட்கப்பட்டார். ஒரு சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்களை கும்மிடிப்பூண்டி அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

எழிலை தாக்கியவர்களை கைது செய்து நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டுமாய் தமிழக அரசினை டியூஜே சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.செய்தி சேகரிக்க செல்லும் பத்திரிகையாளர்கள் மீது தொடர்ந்து தமிழகத்தில் தாக்குதல்கள் நடந்து வருவது கண்டனத்துக்குரிய செயல் ஆகும்.செய்தியாளர்களின்  உயிருக்கும், உடமைக்கும் எந்த உத்தரவாதமும் இல்லை என்ற நிலைதான் தமிழகத்தில் நிலவுகிறது. எனவேதான் மகாராஷ்டிரா, சத்தீஷ்கர் மாநிலங்களில், கொண்டுவரப்பட்டுள்ள "பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு  சட்டத்தை" தமிழகத்தில் கொண்டுவர வேண்டும் என்று   தமிழக அரசை அனைத்து பத்திரிக்கையாளர்கள் மற்றும் சங்கங்கள் அமைப்புகள் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;