tamilnadu

img

உழைக்கும் பெண்களுக்கு காவலன் செயலி குறித்து விழிப்புணர்வு

சென்னை, மார்ச் 6- சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னையில் உழைக்கும் பெண்களுக்கான தற்காப்பு வழிமுறைகள் மற்றும் காவலன் செயலி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. உலக பெண்கள் தினத்தையொட்டி பெண்களுக்கான அதிகாரமளிப்பதை கொண்டாடும் விதமாக   கோபாலபுரத்தில் உள்ள டாக்டர் மோகன் நீரிழிவு சிறப்பு மையம் சென்னை மாநகர காவல்துறையினருடன் இணைந்து இதனை நடத்தியது. இதில் தற்காப்பு வழிமுறைகள், பெண்களுக்கான பாதுகாப்பு, காவலன் செயலியை பயன்படுத்துவதன் அவசியம் ஆகியவை குறித்து சென்னை மாநகர காவல்துறை ஆய்வாளர் கருப்பசாமி, தலைமைக்காவலர்கள்  விஜயா, ஜெயசீலியா ஆகியோர் விளக்கினர். இந்த நிகழ்ச்சி, பெண்கள் மீதான தாக்குதலை தடுப்பதற்கான தற்காப்பு வழிமுறைகள்  குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு, பெண்களின் பாதுகாப்பு அவசியத்தையும் வலியுறுத்தியது. பெண்கள் எந்தவித அச்சமுமின்றி சுதந்திரமாக செயல்படவும், அவர்கள் மீதான தாக்குதலை எதிர்ப்பதற்கான திறன்களை பெறவும் ஊக்குவித்தது என்று   டாக்டர் மோகன் நீரிழிவு சிறப்பு மையத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஆர்.எம். அஞ்சனா  கூறினார். “பெண்கள் மற்றும் நீரிழிவு’’ என்னும் தலைப்பில் பெண்களுக்கான சுகாதாரத்தை வலியுறுத்தும் வகையில் 3 நாள் பொம்மலாட்ட நிகழ்ச்சியை மாணவர்களைக் கொண்டு டாக்டர் மோகன் நீரிழிவு சிறப்பு மையம் நடத்தவுள்ளதாகவும் அவர் கூறினார். 

;