tamilnadu

சாதி-மதவெறியை தூண்ட முயற்சி... கி.வீரமணி எச்சரிக்கை...

சென்னை:
தமிழ்நாட்டு மக்களிடையே சாதி வெறி, மதவெறியைத் தூண்டி வெற்றி பெறலாம் என்று வீண் கனவு காணாதீர்; இது பெரியார் மண், சூழ்ச்சிகளைத் தோலுரித்து விழிப்புணர்வு வெளிச்சத்தைக் காட்டும் பொன்னாடு தமிழ்நாடு என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இருந்த காரணத்தால்தான் தமிழ்நாட்டில் ‘முக்கி முனைந்து’ பாஜக நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதுவும் அதன் சொந்த பலத்தால் அல்ல என்பதும், கூட்டணி கட்சிகளின் தோள்மீது ஏறி நின்றதால் வெற்றி பெற்றார்கள். (4 இடங்களில் இரண்டு தொகுதிகளில் வாக்கு வித்தியாம் கூட மிகமிகக் குறைவு என்பது அவர்களுக்கே தெரியும்).

இதை வைத்துக்கொண்டு, அதிமுகவை தங்களது ‘அடமான கட்சியாகவே’ இன்னமும் வைத்திருக்கும் வாய்ப்பின் காரணமாகவோ என்னவோ, ஒருவகையான புதிய விபரீத அபத்தமான யோசனையை ‘கொங்கு நாடு’ என்று தனியே ஒரு மாநிலமாகப் பிரிப்பதுபற்றி ஒரு யோசனை “கருவுற்றிருக்கிறது” என் பதுபோல, ஒரு பார்ப்பன நாளேட்டில் இரண்டு நாட்களுக்கு முன் ஒரு செய்தி வந்துள்ளது. இதன் நோக்கம் பலவாக இருக்கலாம்.அதை வைத்து ஒரு புதிய விவாதப் பொருளாக மாற்றி, பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அரசின் பெட்ரோல், டீசல் விலை, சமையல் எரிவாயு விலையேற்றம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம், கொரோனாவில் அவர்கள் கையாண்ட முறைபற்றிய விவாதங்களைத் திசை திருப்பும் உத்தியாக இது ஒரு சில நாட்களுக்குப் பயன் பட்டுமே என்ற எண்ணமாகவும் இருக்கலாம்.

திமுக ஆட்சி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்தது மட்டுமல்லாமல், 60 நாட்களில் அவரது ஆட்சியின் சாதனைகள், பாராட்டுகளைப் பல வட்டாரங்களில் பெறுவதையும் சகிக்க முடியாத ஆரியம், பார்ப்பனியம் இப்படி (தமிழ்நாட்டைப் பிரித்து கொங்கு நாடு உருவாக்கம்) ஒரு குறுக்கு யோசனையை முன்வைத்து ஆழம் பார்ப்பதுபோல் தெரிகிறது.முன்பு தமிழ்நாட்டில் காமராசர் ஆட்சி சிறப்பாக நடைபெற்றதை சகிக்க முடியாத ஆரியம்,  ஆச்சாரியார் மூலம் ‘தட்சணப் பிரதேசம்’ என்ற ஒரு விபரீத யோசனையை முன்னெடுத்து வைத்து, காமராசர் முதலமைச்சராக இருக்கக்கூடாது என்று தடுக்க ஒரு தந்திர வியூகத்தை வரைபடம் ஆக்கி, கற்பனைத் தேரோட்டம் நடத்தின என்பதும், அது கருச்சிதைவுற்றது என்பதும் பழைய வரலாறு. இப்போது வேறு ஏதாவது குறுக்குசால் ஓட்ட முடியுமா என்ற ‘’விஷமத்த(தா)னத்தில்’’ இறங்கியுள்ளனர்!கொங்கு மண்டலம் என்ற பகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் ஓரளவு இடங்கள் சட்டமன்றத்தில் கிடைத்துள்ளன! அதனால், அதை வைத்து தி.மு.க.வைத் தடுத்துவிடலாம், பா.ஜ.க.வை எப்படியாவது அங்கே இடம் பிடிக்க வைக்கலாம் என்ற ஒரு அதீத கற்பனையில் ஈடுபட்டு, இப்படி ஆழம் பார்க்க முனைகிறார்கள் என்பது புரிகிறது. தேவையின்றி தமிழ்நாட்டு மக்களிடையே ஜாதிவெறியை, மதவெறியைத் தூண்டி வெற்றி பெறலாம் என்ற வீண் கனவு காணாதீர் என்று எச்சரிக்கிறோம்.இது பெரியார் மண், சூழ்ச்சிகளை, சூதர் களை, அரசியல் சூதாடிகளை அடையாளங் கண்டு தோலுரித்துக் காட்டி, விழிப்புணர்வு வெளிச்சத்தை எப்போதும் காட்டும் திராவிடப் பொன்னாடு தமிழ்நாடு என்பதை உணர்த்த ஒருபோதும் தயங்காது.இவ்வாறு வீரமணி தெரிவித்திருக்கிறார்.

;