tamilnadu

img

சிறுபான்மையினர் மீது தாக்குதல்: இந்துத்துவா சக்திகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தும் இந்துத்துவா சக்திகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உள்துறை செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தின் வழியாக தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநிலத் தலைவர் எஸ்நூர்முகமது. மாநில பொதுச்செயலாளர் எம்.ராமகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாடு எப்போதும் அமைதி பூங்காவாகவே விளங்கி வருகிறது. சில தீய சக்திகள் அமைதிக்கு பங்கம் விளைவிக்கிற போது அதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து அமைதி நிலை நாட்டுவதில் முன்னுரிமை மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. சமீப காலமாக அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறுபான்மையினர் மக்கள் மீது, நிறுவனங்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்களை, வன்முறைகளை இந்துத்துவா சக்திகள் முன்னெடுத்து வருகின்றனர். இந்த சக்திகள் மீது உரிய நடவடிக்கை எடுத்திட முன்வர வேண்டும் என தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

1)நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி அரசு மருத்துவமனையில் அவசர மருத்துவ சிகிச்சை செய்து கொண்டிருந்த சிறுபான்மையினர் பெண் மருத்துவரை அவமானப்படுத்தி, பணி செய்ய விடாமல் தடுத்தும், ஹிஜாபை அகற்ற வேண்டும் என அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் மீது புகார் அளிக்கப்பட்டும் காவல்துறை நடவடிக்கை எடுக்க மறுத்து வருகிறது.

2) விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா செம்பட்டி கிராமத்தில் தங்களது சொந்த இடத்தில் பிரார்த்தனை நடத்திக் கொண்டிருந்த கிறிஸ்தவர்கள் மீது வேறு ஊரைச் சேர்ந்த பாஜக பிரமுகர் தலையீடு செய்து வன்மத்தோடு நடத்து கொண்டதோடு கிறிஸ்தவ போதகர் பாஸ்டர் ஜோஸ்வாவை அவர் பிரார்த்தனை முடித்து வீட்டிற்கு செல்கிறபோது வழிமறித்து தாக்குதல் நடத்தியுள்ளனர் தாக்குதலில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாஸ்டர் ஜோஸ்வாவிடம் வாக்குமூலம் பெற்ற காவல் துறை பாஜகவினர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, சபைக்குள் புகுந்து அராஜகம் புரிந்த பாஜகவினரிடமிருந்து மனுவை பெற்று, படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்றுவரும் பாஸ்டர் ஜோஸ்வா மீது வழக்கு பதிவு செய்து காவல்துறை நெருக்கடி கொடுத்து வருகிறது.

3) மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் கிராமத்தில் சிறுபான்மை பிரிவை சார்ந்த மக்களை ஊரிலிருந்து விலக்கி வைத்து கொடுமைகள் செய்து வருகின்றனர். சக மனிதர்களின் சுமுக வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டிய மாவட்ட நிர்வாகம், உள்ளூர் காவல்துறையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக செயல்படுவதற்கு பதிலாக, அடக்குமுறையாளர்களின் கைப்பாவையாக செயல்பட்டு வருகின்றனர்.

4)தென்காசி மாவட்டம் வி.கே.புதூர் தாலுகா கீழப்பாவூர் ஒன்றியம் அச்சம் குன்றம் கிராமத்தில் சொந்த இடத்தில் தேவாலயம் கட்டுவதை எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி சேர்ந்தவர்கள் பிரச்சனை செய்வதும், அங்கு செயல்படகூடிய அரசு உதவி பெறும் பள்ளிக்கு இடையூறாக செயல்படுவதும் நடைபெற்று வருகிறது. அரசு நிர்வாகமும், கல்வித் துறையும், காவல்துறையும் இந்த அராஜகங்களை தட்டிக் கேட்க மறுப்பதோடு இந்த அராஜகவாதிகளுக்கு துணை போய் வருகின்றனர்

மேற்கண்ட நான்கு நிகழ்வுகள் சமீப நாட்களில் நடைபெற்ற உதாரணங்களாகும் இதுபோல் வெளியே தெரிவிக்க அச்சமுறும் அளவுக்கு பல இடங்களில் பாஜக, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் சார்ந்தவர்கள் சிறுபான்மை மக்கள் மீதும், நிறுவனங்கள் மீதும் தாக்குதல்களை நடத்திக் கொண்டு வருகிறார்கள்.

மேற்கண்ட நிகழ்வுகளில் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆதரவாக அரசு துணை நிற்க வேண்டுமென கேட்டுக் கொள்வதோடு, இந்த அராஜக செயல்களை புரிபவர்கள் மீது கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பாக தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

தமிழகம் அமைதியை, மக்கள் ஒற்றுமையை, மத நல்லிணக்கத்தை, மனிதநேயத்தை பேணுவதில் முன்னணி மாநிலம் என்ற நிலையை உயர்த்திப் பிடிக்க தாங்கள் தலையீடு செய்து இது போன்ற செயல்களுக்கு உரிய நடவடிக்கை எடுத்து மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தையும், அமைதியான வாழ்வையும் உத்திரவாதம் செய்ய வேண்டுமென தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பாக வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.