முன்னாள் அதிமுக அமைச்சர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு
சென்னை,செப்.24- கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். இவர் மீது ஏற்கெனவே அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு ரூ.27 கோடி லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன் பிரபு மீது லஞ்ச ஒழிப்புத்துறை சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்துள்ளது.
அதாவது, கடந்த 2011-16 காலகட்டத்தில் அமைச்ச ராக இருந்தபோது ரூ.33 கோடி வருமானத்திற்கு அதிகமாக (1058 சதவிதம் அதிகம்) சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள் ளது. அடுத்த கட்டமாக, வைத்திலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்ய உள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சை கருத்து: திரைப்பட இயக்குநர் மோகன்ஜி கைது
சென்னை,செப்.24- திரௌபதி, பகாசுரன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய திரைப்பட இயக்குநர் மோகன் ஜி, ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பழனி பஞ்சாமிதம் குறித்து சர்ச்சையான சில கருத்துக்களை தெரிவித்திருந்தார். இந்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி பரவியது. அவரது பேச்சுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இயக்குநர் மோகன்ஜியின் சர்ச்சை பேச்சு தொடர்பாக பழனி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து திருச்சி எஸ்.பி. வருண் குமார் உத்தரவின் பேரில் சென்னையில் உள்ள இல்லத்தில் மோகனை காவல்துறையினர் கைது செய்தனர். பிறகு மோகனை திருச்சிக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவரை நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது.
திட்டங்களை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்
சென்னை,செப்.24- சிறப்பு திட்ட அமலாக்கத்துறை அறிவிக்கும் திட்டங்களை செயல்படுத்தவும், கண்காணிக்கவும் மாவட்ட வாரியாக ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தலைமைச் செய லாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். சிறப்புத் திட்ட அம லாக்கத் துறையால் அவ்வப்போது வழங்கப்படும் அறிவுறுத்தல்கள்படி கண்காணிப்பு அதிகாரிகள் மாவட்டங்களை மதிப்பாய்வு செய்வார்கள். மாதம் ஒருமுறை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு மற்றும் மதிப்பாய்வுகள் உறுதி செய்ய வேண்டும். கண்கா ணிப்பு அதிகாரிகள் சிறப்பு திட்ட அமலாக்கத்துறைக்கு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 இடங்களில் என்ஐஏ சோதனை
சென்னை,செப்.24- சென்னை, கன்னியாகுமரி மற்றும் புதுக்கோட்டையில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் செப்டம்பர் 24 அன்று சோதனை நடத்தினர். தமிழகத்தின் 12 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னையில் ராயப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, திருவல்லிக்கேணி, ஏழுகிணறு, நீலாங்கரை, வெட்டுவாங்கேணி மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம், வண்டலூர், நன்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. பல நாடுகளில் தடை செய்யப்பட்ட ஹிஷாப் உத் தஹீரிர் அமைப்புக்கு ஆள் சேர்ப்பது தொடர்பான வழக்கில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.