அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பு விதிமுறைகளுக்கு புறம்பானது என்று அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சில் தாக்கல் செய்த பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக கலை அறிவியல், பொறியியல், எம்சிஏ படிப்புகளுக்கான அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து தமிழக அரசின் முடிவை ரத்து செய்ய கோரி அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி, வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் தமிழக அரசு பல்கலைக்கழக மானியக்குழு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் பதிலளிக்க உத்தரவிட்டது.
இந்த வழக்கில் தற்போது அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
அதில் தேர்வு நடத்தி மாணவர்களை மதிப்பீடு செய்யாமல் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த தமிழக அரசின் அரசாணை அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சில் விதிகளுக்கு முரணானது என திட்டவட்டமாக உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மேலும் கல்லூரி இறுதி பருவ தேர்வை கண்டிப்பாக நடத்த வேண்டும். அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பட்டம் வழங்கப்படும். மாணவர்கள் தேர்வு எழுதுவதில் இருந்து எந்த விலக்கும் அளிக்கப்படவில்லை என்று ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.