tamilnadu

img

தமிழகத்தில் 7 இடங்களில் தொல்லியல் அகழாய்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் ஏழு இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் மற்றும் சங்ககாலக் கொற்கைத் துறைமுகத்தினை அடையாளம் காண முன்களப் புல ஆய்வு நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், தமிழ் நிலமானது மிகத் தொன்மை வாய்ந்தது. தமிழின் தொன்மையையும், தமிழரின் பண்பாட்டையும் அறிவியல்பூர்வமாக நிறுவ வேண்டுமானால் முறையாக அகழாய்வுகள் செய்வது அவசியமாகும்.

அண்மைக்காலமாக, கீழடி, அழகன்குளம், கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், மயிலாடும்பாறை, கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் தமிழகத்தின் தொன்மையைப் புதிய காலக்கணிப்பு மூலம் பல நூற்றாண்டுக் காலத்திற்கு முன்னோக்கி எடுத்துச் சென்றுள்ளது என்றால் அது மிகையாகாது.

கீழடி அகழாய்வு மற்ற அகழாய்வுகளுக்கு முன்னோடி அகழாய்வாகத் திகழ்கிறது. இதுவரை கங்கைச் சமவெளியில் கி.மு.ஆறாம் நூற்றாண்டிலிருந்த “நகரமயமாக்கம்” தமிழ்நாட்டில் இல்லையென்றும், பிராமி எழுத்து மெளரியர் தோற்றுவித்தது என்றும் கருதுகோள்கள் இருந்தன. அத்தகைய கருதுகோள்களுக்கு அறிவியல்பூர்வமாக விடையளித்துள்ளது.கீழடி அகழாய்வு.

தமிழ்நாட்டில் கி.மு.ஆறாம் நூற்றாண்டிலேயே நகரமயமாக்கம் ஏற்பட்டிருந்தது என்பது மட்டுமல்லாமல், படிப்பறிவும், எழுத்தறிவும் பெற்ற மேம்பட்ட சமூகமாக விளங்கியதை கீழடி அகழாய்வு நிலை நிறுத்தியுள்ளது.

சிவகளை முதுமக்கள் தாழியில் கண்டெடுக்கப்பட்ட உமி நீங்கிய நெல்மணிகளின் காலம் கி.மு.ஆயிரத்து நூற்று ஐம்பத்தைந்து எனக் கண்டறியப்பட்டுள்ளது. “தண் பொருநை’ என்று அழைக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் மூவாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை அறிவியல்பூர்வ ஆய்வுகளின் அடிப்படையில் உறுதி செய்ய முடிகிறது என்பதை கடந்த 8-9-2021 அன்று சட்டப்பேரவையில் நான் அறிவித்தேன்.

இதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கி வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் வரலாற்றுக்காலம் வரையிலான தொல்லியல் இடங்களில் அகழாய்வு செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

  1. கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்கள்(கொந்தகை,அகரம்,மணலூர்), சிவகங்கை மாவட்டம்-எட்டாம் கட்டம்
  2. சிவகளை, தூத்துக்குடி மாவட்டம்-மூன்றாம் கட்டம்
  3. கங்கைகொண்ட சோழபுரம், அரியலூர் மாவட்டம்-இரண்டாம் கட்டம்
  4. மயிலாடும்பாறை, கிருஷ்ணகிரி மாவட்டம்-இரண்டாம் கட்டம்
  5. வெம்பக்கோட்டை, விருதுநகர் மாவட்டம்-முதல் கட்டம்
  6. துலுக்கர்பட்டி, திருநெல்வேலி மாவட்டம்- முதல் கட்டம்
  7. பெரும்பாலை, தர்மபுரி மாவட்டம்-முதல் கட்டம்

பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் தொன்மை, பண்பாடு மற்றும் விழுமியங்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் தற்போது 2022-ஆம் ஆண்டில் மேற்கண்ட ஏழு இடங்களில் அகழாய்வுகள் செய்யப்படவுள்ளன.