tamilnadu

img

முறைகேடான கட்டணங்களை திருப்பித்தர ஒப்புதல் மார்க்சிஸ்ட் கட்சி போராட்டத்திற்கு பணிந்தது பள்ளி நிர்வாகம்

சென்னை, ஜூன் 20 - கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சேர்ந்த மாணவர்களிடம் வசூலித்த கட்டணத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டத்தையடுத்து திருப்பித் தர பள்ளி நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது. மேற்கு கே.கே.நகரில் டாக்டர் விமலா கான்வெண்ட் மெட்ரிக்கு லேசன் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேருகிற மாணவர்களிடம்  கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பிற மாணவர்களிடம் அரசு நிர்ணயித்ததை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 8 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்க வேண்டிய வகுப்பிற்கு 20ஆயிரம் ரூபாய் வசூலிக்கின்றனர். பணம் கட்ட முடியாத பெற்றோர்களுக்கு வங்கி கடன் என்ற பெயரில் கந்துவட்டி கும்பல், நுண்கடன் நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் வாங்கி கொடுத்து கட்டணத்தை வசூலித்துள்ளனர். இதனை எதிர்த்து கடந்த 3ஆம் தேதி இப்பள்ளி முன்பு மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தியது. இதனையடுத்து நடைபெற்ற பேச்சு வார்த்தையில் முறைகேடாக, அதிகமாக வசூலிக்கப்பட்ட கட்டணங்களை திருப்பி தர பள்ளி நிர்வாகம் ஒப்புக்கொண்டது. ஆனால் வழங்கவில்லை. இந்நிலையில், மார்க்சிஸ்ட்  கட்சி தலைமையில் பெற்றோர்கள் வியாழனன்று (ஜூன் 20) பள்ளியை முற்றுகையிட ஊர்வலமாக சென்றவர்களை  போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தைக்கு அழைத்தனர். இப்பேச்சுவார்த்தையில் மாவட்டக் கல்வி அதிகாரி, சிபிஎம் தென்சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.செல்வா, பகுதிச் செயலாளர்கள் சி.செங்கல்வராயன் (விருகை), வி.தாமஸ் (மதுரவாயல்) ஆகியோரும், பள்ளி நிர்வாகிகளும் கலந்து கொண்டார். இதன்பின்னர் செய்தியாளர்களி டம் ஜி.செல்வா கூறியதாவது: கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்ந்த மாணவர்களிடம் வசூலித்த முழுக் கட்டணத்தையும் திருப்பித் தரவும், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்ந்த மாணவர்க ளின் பெயர் பட்டியலை முழுமையாக வெளியிடவும், மீதமுள்ள இடங்களை முறைகேடின்றி நிரப்பவும் பள்ளி நிர்வாகம் ஒப்புக் கொண்டது. அரசு நிர்ணயித்ததை விட மாணவர்களிடம் வசூலித்த கூடுதல் கட்டணத்தையும் திருப்பித் தர பள்ளி நிர்வாகம் ஒப்புக் கொண்டது. நுண்கடன் நிதி நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட கல்வி அதிகாரி உறுதிஅளித்துள்ளார். இதனை நிறைவேற்றாவிடில் தொடர் போராட்டம் நடைபெறும் இவ்வாறு அவர்  கூறினார்.