tamilnadu

அண்ணா பல்கலை. ஊழியர்கள் நியமனத்தில் முறைகேடு

சென்னை, ஜூன் 1- அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் விதிமுறைகளை  மீறி ஊழியர்கள்  நியமிக்கப்பட்டுள்ளதாக ஆதாரங்களுடன் புகார்  தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் விதிமுறைகளை மீறி நியமிக்கப்பட்டதாக எழுந்த புகாரில் 135 பேராசிரியர்கள் கண்டறியப்பட்டனர். மேலும் 60 பேர் தங்களை போலவே விதிமுறைகளை மீறி அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருவதாக கூறி அவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களை தலைமையாகக் கொண்டு அண்ணா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மேற்கண்ட மாவட்டங்களில் இயங்கி வந்த அண்ணா பல்கலைக்கழகங்கள் கடந்த 2012ஆம் ஆண்டு மீண்டும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் ஒன்றாக இணைக்கப்பட்டது. உறுப்பு கல்லூரிகளாக இணைக்கப்பட்ட கல்லூரிகளில் நடைபெற்ற பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் நியமனம் முறையாக நடைபெறவில்லை என்று புகார் எழுந்தது.  இதனையடுத்து பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் நியமனங்கள் தொடர்பாக விசாரிக்க தமிழக அரசு ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆனந்தகுமார் தலைமையில் 5 அதிகாரிகள் கொண்ட குழு ஒன்று 2017ஆம் ஆண்டு ஜூலையில் அமைத்தது. இந்தக் குழு நடத்திய விசாரணையில், 2012ஆம் ஆண்டு பல்கலைக்கழக இணைப்பின் போது நடைபெற்ற 135 பேராசியர்கள் உள்ளிட்ட ஊழியர்களின் நியமனங்களில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதை கண்டறிந்தது.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அண்ணா பல்கலைக்கழகத்திற்கு பரிந்துரை செய்தது. இதனால் அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டது.  இந்நிலையில், அனந்தகுமார் அறிக்கையின் மீது எவ்வித நடவடிக்கையும் கூடாது என்று 135 பேர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் அவர்கள் மீதான நடவடிக்கை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மேலும் 60 பேர் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் விதிமுறைகளை மீறி பணியாற்றுவதாக 135 பேர் சார்பில் 60 பேரின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக பாதிக்கப்பட்ட 135 பேரும் விதிமுறை மீறலில் சிக்காமல் இருந்தவர்களைக் காட்டிக் கொடுத்துவிட்டதாக அண்ணா பல்கலைக்கழக வட்டாரங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள நபர்கள் பி,எச் டி முடித்து 3 ஆண்டுகள் கழித்தே பேராசிரியராக நியமனம் செய்ய வேண்டும் என்கிற விதியினை மீறி அதற்கு முன்பே பேராசிரியர்களாகவும், உறுப்பு கல்லூரிகளின் டீன்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.