tamilnadu

img

அரசு ஊழியராக்கக் கோரி அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்....

சென்னை:
அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்கக் கோரி ஜனவரி 29 வெள்ளியன்று  சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட இயக்குநர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது.

38 ஆண்டுகளாக பணியாற்றி வரும் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், முறையான வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் தர வேண்டும், ஓய்வுபெறும் ஊழியருக்கு பணிக்கொடையாக 10 லட்சம் ரூபாயும், உதவியாளருக்கு 5 லட்சம் ரூபாயும் வழங்க வேண்டும் என்று கோரி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதன் ஒருபகுதியாக நடைபெற்ற இந்தப்போராட்டத்தில் பேசிய சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தை தனியார்மயமாக்க ஆட்சியாளர்கள் முயற்சித்து வருகின்றனர். அரசு ஊழியராக்கப் போராடும் அதே நேரத்தில் இந்த திட்டத்தை பாதுகாப்பதற்கான போராட்டத்தை வலுவாக நடத்த வேண்டும் என்றார்.

அங்கன்வாடி மற்றும் உதவியாளர்களின் கோரிக்கைகளை அரசு விரைந்து நிறைவேற்றாவிடில், தேர்தலுக்கு முன் மாபெரும் போராட்டத்தை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தார்.இந்தப் போராட்டத்தில் சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன், சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டி.டெய்சி, மாநிலச் செயலாளர்கள் பி.சித்ரசெல்வி, எஸ்.ஹேமபிரியா, மாவட்ட நிர்வாகிகள் கே.நிர்மலா, ஜி.ஸ்ரீதேவி, கே.விஜயலஷ்மி (தென்சென்னை), வி.ருக்மணி, என்.நிர்மலா, பி.மணிமாலை (வடசென்னை) உள்ளிட்டோர் பேசினர்.

;