tamilnadu

img

ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.372.06 கோடி நிதி ஒதுக்கீடு

ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.372.06 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அரசு கூடுதல் தலைமைச் செயலர் (போக்குவரத்து துறை) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கடந்த ஏப்ரல் 2022 முதல் நவம்பர் 2022 வரை பணிபுரிந்து ஓய்வு பெற்ற, விருப்ப ஓய்வு பெற்ற மற்றும் இறந்த பணியாளர்கள் என மொத்தம் 3414 பயனாளிகளுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப் பலன்களுக்காக ரூ.1031.31 கோடி வழங்கிட 29.03.2023 அன்று உத்தரவிடப்பட்டு, அதன்பின்னர் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கடந்த டிசம்பர் 2022 முதல் மார்ச் 2023 வரை பணிபுரிந்து ஓய்வு பெற்ற மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற பணியாளர்கள் என மொத்தம் 1279 பயனாளிகளுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்புத் தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப் பலன்களுக்காக ரூ.372.06 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.