தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க அனைத்து கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரும் மசோதாவை தமிழக ஆளுநர் ரவி 5 மாதங்கள் கழித்து திருப்பி அனுப்பினார். இதில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும், சட்ட வாய்ப்புகள் குறித்தும் ஆலோசனை நடத்த சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். இந்த கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நாமக்கல் கவிஞர் மாளிகையில் தொடங்கியது. இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், விசிக, மதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்றன. அதிமுக, பாஜக, புரட்சிபாரதம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன.
கூட்டத்தில் நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க ஆளுநரை வலியுறுத்துவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.