பேரவையில் அமளியில் ஈடுபட்டதால்
அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றம் - சஸ்பெண்ட்
தமிழக சட்டப்பேரவையில் திங்க ளன்று (ஏப்.7) கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் உள்ள ஒரு பிரச்சனை குறித்து பேச முயற்சித்தார். ஆனால் அவர் பேச மு.அப்பாவு அனுமதிக்கவில்லை. அப்போது பேசிய அவை முன்னவர் துரைமுருகன், “எதிர்க்கட்சி தலைவர் பேச வருகிற விவகாரம் (டாஸ்மாக்) நீதி மன்றத்தில் உள்ளது. ஆனால் அதுபற்றி சட்டப்பேரவையில் பேச முடியாது” என்றார். “கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் 7 ஆம் தேதி அப்போதைய எதிர்க்கட்சி தலை வரும் தற்போதைய முதல்வருமான மு.க. ஸ்டாலின் ஒன்றை முன்வைத்துப் (ஸ்டெர்லைட்) பேசினார். அப்போதைய பேரவைத் தலைவர் தனபால் இந்த பிரச்சனை நீதிமன்றத்தில் இருப்பதால், பேரவைக்குள் பேச முடியாது என்று கூறி விட்டார். மேலும் பேரவை விதிகளின்படி, ஒரு பிரச்சனை நீதி மன்றத்தில் இருந்தால், இதுகுறித்து இங்கு பேச அனு மதி இல்லை என்றும் கூறினார். அதை பின்பற்றி தற்போது இந்த பிரச்சனை குறித்து பேச அனுமதி கொடுக்க முடியாது” என்றார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் எ.வ.வேலு, “கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி தற்போதைய முதல்வர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, ஒரு பிரச்சனை குறித்து பேச எழுந்தார். அப்போது தற்போதைய எதிர்க்கட்சி தலைவர், அப்போதைய முதல்வர் இந்த பிரச்சனை நீதிமன்றத்தில் உள்ளது. வழக்குக்கு குந்தகம் ஏற்படும் என்று பேச அனுமதிக்க முடியாது என்று கூறினார். அந்த மரபை எதிர்க்கட்சித் தலைவர் பின்பற்ற வேண்டும்” என்றார். இதைத் தொடர்ந்து பேசிய துரை முருகன், “இன்றைய எதிர்க்கட்சி தலைவர் முதல்வராக இருக்கும் போது மட்டும் நீதிமன்றம் சென்று தடை வாங்க வில்லையா? என்றார். கூச்சல்-குழப்பம் இதனை தொடர்ந்து எடப்பாடி பழனி சாமிக்கு பேச அனுமதி அளிக்கவில்லை. மேலும் அந்த தியாகி யார் என்ற வாசகம் பொறித்த பேட்ஜ் அணிந்து வந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பதாகைகளை ஏந்தி கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற சபைக் காவலர்களுக்கு பேரவைத் தலைவர் மு.அப்பாவு உத்தரவிட்டார். தொடர்ந்து அவர்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அவையில் இருந்து வெளியேற்றப்பட்ட அதிமுகவினரை ஒரு நாள் சஸ்பெண்ட் செய்தும் பேரவைத் தலைவர் உத்தரவிட்டார். எச்சரிக்கை - வெளிநடப்பு முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று, தனது தீர்ப்பை வாசித்த பேரவைத் தலைவர் மு.அப்பாவு, “சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிமுக உறுப்பினர்கள் இன்று ஒருநாள் மட்டும் பேரவை நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாது. மேலும், இனி வரும் காலங்களில் எந்த ஒரு உறுப்பினரும் சட்டப்பேரவைக்குள் பதாகைகளை கொண்டு வரக்கூடாது. சட்டையில் பேட்ச் அணிந்து வரக்கூடாது என்று எச்சரித்தார்.
அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
கிருஷ்ணகிரி, ஏப். 7 - கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் பணிக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காலியாக உள்ள 28 அங்கன்வாடி பணியாளர்கள், 9 குறு அங்கன்வாடி பணியாளர்கள், 65 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வட்டார வாரியாக நேரடி நியமனம் செய்யப்படவுள்ள எண்ணிக்கை மற்றும் இன சுழற்சி விபரம் மாவட்ட திட்ட அலுவலகத்திலும், அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களிலும், தகவல் பலகையில் ஒட்டப்படும். விண்ணப்பங்களை, www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, வரும் 23 ஆம் தேதி பிற்பகல் 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யப்பட்டு,தொடர்ந்து ஒரு வருட காலம் பணியை முடித்த பின் அவர்கள் சிறப்பு காலமுறை ஊதியத்தின் கீழ் ஊதியம் பெறுவர். இப்பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். அங்கன்வாடி, குறு அங்கன்வாடி பணியாளர் பணியிடங்களுக்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், உதவியாளர் பணியிடத்திற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், தமிழ் சரளமாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர் அறிவிக்கப்பட்டுள்ள பகுதியில் அல்லது அருகில் இருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை காலிப்பணியிட குழந்தை மையம் அமைந்துள்ள வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் உரிய சான்றிதழ்களுடன் சமர்ப்பிக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார்.
ஞானசேகரனை விடுவிக்கக் கூடாது: தமிழக அரசு பதில் மனு சென்னை, ஏப்.7- சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவரை போலீசார் கடந்த ஆண்டு டிசம்பரில் கைது செய்தனர். இந்த வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், “எனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. எனவே, இந்த வழக்கில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும்,” என்று ஞானசேகரன் தரப்பில் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு பொறுப்பு மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பாக இன்று (ஏப்.7) விசாரணைக்கு வந்தது. அப்போது ஞானசேகரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கில் ஞானசேகரன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு காவல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதிய முகாந்திரங்கள் உள்ளன. இவர்தான் குற்றம் புரிந்துள்ளார் என்பதற்கு அனைத்து ஆதாரங்களும் உள்ளன. எனவே, ஞானசேகரனை வழக்கில் இருந்து விடுவிக்கக் கூடாது. இது தொடர்பாக ஞானசேகரன் தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்,” என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை நீதிபதி செவ்வாய்க்கிழமைக்கு (ஏப்.8) ஒத்திவைத்துள்ளார்.