விழுப்புரம்,டிச.2- கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த வழக்கு விசாரணை கள்ளக்குறிச்சி தலைமை குற்றவி யல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது என விழுப்புரம் நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம்,கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளியில் 12 ஆம் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 13-ஆம் தேதி பள்ளி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந் தார். இதுகுறித்து விழுப்புரம் சிபிசிஐடி காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது மாணவியின் தாய் செல்வி தரப்பு வழக்கறிஞர் மோகன் ஆஜராகி வாதிட்டார். பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் கேட்கும் ஆவணங்களை வழங்குமாறும் கோரினார். அப்போது சிபிசிஐடி காவல் துறை தரப்பில் வாதங்களை முன்வைக்க மேலும் கால அவகாசம் கோரப்பட்டது.
வழக்கை விசாரித்த தலைமை குற்றவி யல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி, கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்ட பிறகு அங்கு மாவட்ட அமர்வு நீதிமன்றம் வரும் காரணத்தால் இந்த வழக்கு தொடர்பான கோப்புகள் அனைத்தும் கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மாற்றப்படு கிறது என்று தெரிவித்தார். மேலும், இந்த வழக்கு விசாரணை வரும் டிசம்பர் 13ம் தேதி நடைபெறும் என்று உத்தரவிட்டார்.