மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
சங்கராபுரம், மே 19- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் மீது தொடர்ந்து பொய்ப்புகார் அளித்து வரும் பாஜக -வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஎம் கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை வலியுறுத்தி உள்ளார். வாணாபுரம் கடைவீதியில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் வைக்கப்படும். இந்த சிலை வைப்பதில் தகராறு ஏற்படுத்துவதை பாஜகவினர் வழக்கமாக கொண்டுள்ளனர். இங்குள்ள கிருத்துவ மக்களின் தேவாலயத்தை செயல்படவிடாமல், அவ்வப்போது மோதல் போக்கை உருவாக்குகின்றனர். பிற மதத்தவர் மீது வெறுப்பு பிரச்சாரத்தை நடத்தி வருகின்றனர்.
இப்பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மக்களிடையே மோதல் ஏற்படாமல் தடுத்து வருகின்றனர். இதனால் கடந்த 2018 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சியினர் மீது பாஜகவினர் பொய் புகார் அளித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை ரத்து செய்ய வேண்டும் என்று உயர் அதிகாரிகளிடம் மார்க்சிஸ்ட் கட்சி முறையீடு செய்தது. இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி டாஸ்மாக் கடைகளை திறப்பதை ரத்து செய்ய கோரி திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் சார்பில் அவரவர் வீடுகளில் கருப்பு சின்னம் அணிந்து எதிர்ப்பை தெரிவித்தனர். இதன் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று பாஜக-வை சேர்ந்த அ.ச.ரவி என்பவர் பகண்டை கூட்ரோடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மக்கள் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்து, அந்தப்பகுதியில் மோதல் உருவாகாமல் தடுக்க வேண்டுமென்று திருக்கோவிலூர் காவல் துணை கண்காணிப்பாளரிடம் சிபிஎம் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் டி.ஏழுமலை நேரில் மனு அளித்துள்ளார்.