tamilnadu

பெண்கள் பிரச்சனைகள் குறித்து கவலைப்படாத பட்ஜெட்

பெண்கள் பிரச்சனைகள் குறித்து கிஞ்சிற்றும் கவலைப்படாத பட்ஜெட் என்றும், உணவுப் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், கல்வி, சுகாதாரம் போன்றவற்றிற்கு பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டும்  என்று வலியுறுத்தி நாடு முழுதும் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுமாறு அனைத்துக் கிளைகளையும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அறைகூவி அழைத்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

புதிதாக ஆட்சி அமைத்திருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் இன்றையதினம் பெண்கள் எதிர்கொள்ளும் சமூக எதார்த்த நிலையைக் கணக்கில் எடுத்துக்கொள்வதில் முற்றிலும் தோல்வியடைந்துள்ளது என்பதையே அது சமர்ப்பித்திருக்கும் பட்ஜெட் காட்டு கிறது. ஜனநாயக மாதர் சங்கம் அடிக்கடி சுட்டிக்காட்டு வதுபோல் நாளும் ஏறும் விலைவாசி உயர்வாலும், வேலையின்மையாலும் பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த ஆண்டுக் கான சராசரி உணவுப் பணவீக்கம் 8 முதல் 9.5 விழுக்காடாகும். ஆனாலும், இதனை மறைத்து ஆட்சியாளர்கள் இது வெறும் 3.1 விழுக்காடு என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள்.

வேலைவாய்ப்பை உருவாக்கும் செலவினம் குறைப்பு

பெண்களுக்கு நாகரிகமான பணி நிலைமைகளுடனும் சமூகப் பாதுகாப்புடனும் வேலை அளிப்பது என்பது நிறுத்தப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் நாட்டில் முறைசாராத் தொழில்களில் அதிகரித்துக்கொண்டிருக்கும் வேலைவாய்ப்பு நெருக்கடியால் அவர்கள் கடுமை யாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான செலவினம் அரசால் கடந்த  பத்தாண்டுகளாகப் படிப்படியாகக் குறைக்கப்பட்டுக் கொண்டே வந்திருக்கிறது. அது இந்த பட்ஜெட்டிலும் தொடர்கிறது. 

சாமானிய மக்களுக்கான நலத்திட்டங்களுக்கான பொதுச் செலவினமும் இந்த பட்ஜெட்டில் வீழ்ச்சியடைந் திருப்பது தொடர்கிறது. பொதுச் செலவினம் என்பது 2023-24ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15.24 விழுக்காடாக இருந்தது. அது இப்போது 2024-25ஆம் ஆண்டிற்கு 14.74 விழுக்காடாக வீழ்ச்சியடைந்திருக்கிறது. அனைத்து சேவைகளையும் தனியாரிடம் தாரை வார்த்திட வேண்டும் என்ற நோக்கத்துடன் அனைத்து அடிப்படை வசதிகளையும் மக்களுக்கு அளிக்க வேண்டும் என்கிற பொறுப்பிலிருந்து அரசு தன்னை விலக்கிக்கொண்டிருப்பதையே இது காட்டுகிறது.  

உணவு மானியம் குறைவு

நாட்டு மக்களில் பெரும்பாலானவர்கள் பசி-பட்டினிக் கொடுமைக்கு ஆளாகியிருப்பது குறித்து அரசாங்கம் கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை என்பதையே அது அளித்துவந்த உணவு மானியங்களை மேலும் வெட்டிக் குறைத்திருப்பதிலிருந்து காண முடிகிறது. 2022-23இல் உண்மையில் ஏற்பட்ட செலவினத்தில் 34.75 விழுக்காடு அளவிற்கு உணவு மானியம் இப்போது குறைக்கப்பட்டிருக்கிறது. 

சென்ற ஆண்டிலிருந்து அங்கன்வாடி திட்டத்திற்கும், ஊட்டச்சத்து திட்டத்திற்கும் அளித்து வந்த தொகையில் 323 கோடி ரூபாய் குறைக்கப்பட்டிருக்கிறது. இது ஊட்டச்சத்து திட்டங்களைக் கடுமையாகப் பாதித்திருக்கிறது. மேலும் இந்த அரசாங்கம் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் எவ்வித ஒதுக்கீட்டையும் ஏற்படுத்தவில்லை. இது பொது விநியோக முறையையே ஒழித்துக்கட்டிவிடும். பொது விநியோக முறை என்பது சட்டரீதியான ஒன்று. அதனை இப்போது இந்த அரசு கருணையான ஒன்றாக மாற்றியிருக்கிறது.

சட்டத்தை மீறிய செயல்

இது ஏழை மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தையே மீறிய செயலாகும்.  இதனால் நாட்டில் வாழும் கோடானுகோடி மக்கள் கடும் பட்டினிக் கொடுமைக்கு ஆளாவார்கள்.  வேலை வாய்ப்புகளை பெருக்குவதற்கான திட்டங்களுக்கான பொதுச் செலவினமும் வீழ்ச்சி யடைந்திருக்கிறது. மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் கீழான ஒதுக்கீடும் போதுமானதல்ல.

உணவுப் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், கல்வி, சுகாதாரம் போன்றவற்றிற்கு பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி நாடு முழுதும் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுமாறு அனைத்துக் கிளைகளையும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அறைகூவி அழைக்கிறது.

இவ்வாறு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.                    (ந.நி.)