சென்னை, ஜூலை 9 - மூளையை அரிக்கும் அமீபா நோய் தொற்றுக்கு கேரளத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்த நிலையில், தமிழகத்தில் நீர் நிலைகளின் சுகாதாரத்தை உறுதி செய்ய உள்ளாட்சி அமைப்புகளுக்கு சுகாதாரத்துறை அறிவுரை வழங்கியுள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் கடிதம் எழுதியுள்ளார். அதில், தேங்கி இருக்கும் நீரில் குளிப்பதை பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் தவிர்க்க வேண்டும். நீர் நிலைகள், குளங்கள், ஏரிகள் சுற்றுச்சூழல் சுகாதாரம் பேணப்பட வேண்டும். அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் என்னும் மூளையை தின்னும் நோய் தொற்று தொடர்பான உயிரிழப்புகள் கேரளத்தில் நிகழ்ந்ததை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தலைவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி, குழப்பம், பிரமைகள் மற்றும் வலிப்பு போன்றவை இந்நோயின் அறிகுறிகள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.