சென்னை, செப். 23 - தமிழ்நாட்டில் உடல் நலம் குன்றி மருத்துவச் சிகிச்சை மேற்கொண்ட 6 பத்திரிகையாளர்களுக்கு பத்திரிகையாளர் நல நிதித் திட்டத்தின் கீழ் 10 லட்சத்து ஆயிரத்து 206 ரூபாய்க்கான காசோலைகளை, திங்களன்று (செப்.23) செய்தி விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் வழங்கினார்.
கலைஞர் ஆட்சிக் காலத்தில் 14.1.2008 அன்று வெளியிடப்பட்ட அரசாணையின்படி, புதிய திட்டமாக பத்திரிகையாளர் நல நிதியம் உருவாக்கப்பட்டது. அன்று அரசின் 1 கோடி ரூபாய் முதலீட்டுடன் தொடங்கப்பட்ட பத்திரிகையாளர் நல நிதியத்திலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையிலிருந்து, கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் பத்திரிகையாளர்களுக்கு மருத்துவ நிதியுதவி வழங்க வழி செய்யப்பட்டு வருகிறது.
பத்திரிகையாளர்கள் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் போது ஏற்படும் மருத்துவச் செலவை ஈடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் அவர்களுக்கு நிதியுதவியாக ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் வரையும், பத்திரிகையாளர் ஓய்வூதி யம் பெறுபவர்களுக்கு பத்திரிகையாளர் நல நிதித் திட்டத்தின் கீழ் 19.7.2022 அன்று பிறப்பித்த அரசாணையின்படி, பத்திரிகையாளர் நல நிதித் தொகையிலிருந்து 50 சதவிகித தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்தில் 6 பத்திரிகை யாளர்களுக்கு மருத்துவ நிதியுதவியாக மொத்தம் 10 லட்சத்து ஆயிரத்து 206 ரூபாய்க்கான காசோலைகளை திங்களன்று (செப்.23) வழங்கினார்.
நிகழ்வின்போது, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே. ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மரு. இரா. வைத்திநாதன், கூடுதல் இயக்குநர் (செய்தி) எஸ். செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர். செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் கடந்த 2021 முதல் தற்போது வரை பத்திரிகையாளர் நல நிதித் திட்டத்தின் கீழ் 13 பத்திரிகையாளர்களுக்கு மொத்தம் 25 லட்சத்து 11 ஆயிரத்து 339 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.