மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை ஒகேனக்கல் சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் திங்களன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் ஒகேனக்கல், சிறுவாணி போன்ற சுற்றுலாத் தலங்களில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால், சுற்றுலாப் பயணிகள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் 4 கிராமங்கள் தனித்தீவாகின
விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணை மற்றும் கோரையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மாரங்கியூர், சேத்தூர், பையூர், கொங்கராயனூர் ஆகிய நான்கு கிராமங்கள் தனித்தீவுகளாக மாறியுள்ளன.
தொடர்மழை மற்றும் சாத்தனூர் அணை திறப்பால் ஏற்பட்ட வெள்ளத்தால் கிராம மக்கள் வெளியே செல்ல முடியாமல் தவிக்கின்றனர். பையூரில் மேம்பாலத்துக்குச் செல்லும் சாலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
51,707 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன: அமைச்சர் தகவல்
சென்னை,டிச.2- தமிழக மருத்துவம் -மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பி ரமணியன் பெஞ்சால் புயல் காரணமாக மழைக்கால நோய்கள் பரவாமல் தடுக்கும் விதமாக நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாமை கிண்டி மடுவின்கரை பகுதியில் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியா ளர்களிடம் அமைச்சர் பேசுகையில், தற்போது சென்னை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 500 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது.
கடந்த ஒன்றரை மாதத்தில் தமிழகம் முழுவதும் 51,707 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டுள்ளது. இதில் 28,02,552 பேர் பயனடைந்து உள்ளனர். என்றார்.
திருவனந்தபுரம்-எழும்பூர் ரயில் விருத்தாசலத்தில் நிறுத்தம்
திருவனந்தபுரம்-எழும்பூர் ரயில் விருத்தாசலத்தில் மழைவெள்ளம் காரணமாக நிறுத்தப்பட்டது. ரயில்வே பாலத்தில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் ஓடியதால், சுமார் 1000 பயணிகள் மூன்று மணி நேரம் தவித்த பின்னர் இறக்கிவிடப்பட்டனர். பயணிகள் பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்கள் மூலம் சென்னை புறப்பட்டனர்.
நீலகிரியில் மலை ரயில் சேவை ரத்து
நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உதகை-மேட்டுப்பாளையம், உதகை-குன்னூர் இடையிலான மலை ரயில் சேவை திங்கள், செவ்வாய் ஆகிய இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. மழைக் காலங்களில் மலை ரயில் பாதையில் மண்சரிவு ஏற்படும் ஆபத்து உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கால் பல ரயில்கள் திடீர் நிறுத்தம்
பெஞ்சால் புயல் காரணமாக விழுப்புரத்தில் உள்ள வராக நதி ஆற்றின் மேலமைந்த ரயில்வே பாலத்தில் இரண்டு அடி உயரத்திற்கு தண்ணீர் செல்வதால், பாண்டியன், பொதிகை, கன்னியாகுமரி உள்ளிட்ட அதிவிரைவு ரயில்கள் நிறுத்தப்பட்டன. உழவன் உள்ளிட்ட ஐந்து விரைவு ரயில்கள் திருவண்ணாமலை, காட்பாடி வழியாக சென்னைக்குத் திருப்பிவிடப்பட்டன.