tamilnadu

img

ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் உள்பட 4 புதிய வகை ரயில்கள்

சென்னை, டிச. 10- சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் 50ஆவது வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணி அடுத்த வாரத்தில் நிறைவு பெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவில் முதல் முறையாக புஷ்புல் ரேக் எனப்படும் நவீன ரயில் சென்னை ஐசிஎப் தொழிற்சாலை தயாரித்து  சாதனை படைத்துள்ளது. மேலும் கடந்த 2022-2023 நிதி ஆண்டில் மட்டும் 2022 ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை படைத்துள்ளது. அந்த வகையில் சென்னை ஐசிஎஃப் ஆலை யில் நாட்டின் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு ரயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2018ஆம் ஆண்டு இங்கு முதல் வந்தே  பாரத் ரயில் தயாரிக்கப்பட்டது. இது தில்லி - வாரணாசி இடையே துவக்கி வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் 400 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் முதல் கட்டமாக 75 வந்தே பாரத் ரயில்களை இயக்க ரயில்வே  தீவிரம் காட்டி வருகிறது.

இதுவரை 49 வந்தே பாரத் ரயில்கள் தயா ரிக்கப்பட்டு ரயில்வேயிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. காந்திநகர் - மும்பை, தில்லி - காத்ரா, சென்னை - கோவை, சென்னை - விஜய வாடா, சென்னை - திருநெல்வேலி, சென்னை - மைசூர், திருவனந்தபுரம் - காசர்கோடு உள்ளிட்ட வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது 50ஆவது வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணி முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், இந்த பணிகள்  அடுத்த வாரத்திற்குள் முடிவடையும் என ஐசிஎப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாரத்திற்கு இரண்டு வந்தேபாரத் ரயில் தயாரிப்பு 
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியிருப்பதாவது, வந்தே பாரத் ரயிலுக்கு பயணிகள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. எனவே சென்னை ஐசிஎப் 2023-2024ஆம் நிதியாண்டில் 736 வந்தே  பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்க திட்ட மிடப்பட்டுள்ளது. வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று வந்தே பாரத் ரயில்களை தயாரித்து வழங்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. தலா 16 பெட்டிகள் கொண்ட 46 வந்தே பாரத் ரயில்கள் அல்லது எட்டு பெட்டிகள் கொண்ட 92 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் சென்னை ஐசிஎப் ஆலையில் 50ஆவது வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணிகள் முழு  வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த மாத  இறுதிக்குள் இந்த ரயிலை தயாரித்து வழங்கு வோம் என தெரிவித்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை அதிகாரிகள் கூறுகையில், கடந்த 2018ஆம் ஆண்டுக்கு பிறகு அடுத்தடுத்து தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்களில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக வேகம் அதிகரிப்பு, பயணத்தின் போது அதிர்வு குறைவு, உள் அலங்காரம், ரயில் பெட்டிகளின் வெளிப்புறத்தில் சிசிடிவி கேமரா உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை செய்துள்ளோம்.

மேலும் விலங்குகள் மீது மோதும் போது பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க முகப்பில் சில மாற்றங்கள் செய்ய உள்ளோம். 50ஆவது வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணியை அடுத்த வாரத்திற்குள் முடித்து ரயில்வேயிடம் ஒப்படைக்க உள்ளோம்.

படுக்கை வசதியுடன் வந்தே பாரத்
 அடுத்த கட்டமாக படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில், வந்தே மெட்ரோ, புறநகர் மின்சார வந்தே பாரத் என மேலும் 4 புதுவகை ரயில்களை  படிப்படியாக தயாரிக்க உள்ளோம். அதன் பின் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயிலை உள்நாட்டில் தயாரிக்கும் பணியையும் ஐசிஎப்-இல் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.