மறைமலைநகர், ஜன.29- மறைமலைநகர் நகராட்சி பகுதியில் உள்ள தொழிற்சாலையின் கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் அருகே உள்ள நின்னக்கரை ஏரியில் கலக்கிறது. இதுகுறித்து வாலிபர் சங்கம் சார்பில் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் பெறப்பட்டு முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனுவாக அளிக்கப்பட்டது. மேலும் ஏரியில் கழிவு நீர் கலப்பது குறித்து உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்து, வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தொழிற்சாலை களிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், சுத்திகரிப்பு செய்த பிறகே வெளியேற்றப்பட வேண்டும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்தது. ஆனால் இதை தொழிற்சாலைகள் நடைமுறைப்படுத்தாததால், 275 தொழிற்சாலைகளின் கழிவு நீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ள தாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்து ள்ளது. இதுகுறித்து நகராட்சி செயற்பொறியாளரிடம் கேட்ட போது, ‘தொழிற்சாலையிலிருந்து சுத்திகரிக்கப் படாமல் கழிவு நீர் வெளியேற்றப்பட்டுவந்தன. இதனைத் தடுக்கும் பொருட்டு 275 தொழிற்சாலைகளின் கழிவு நீர் இணைப்பு நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கழிவு நீர் நேரடியாக ஏரியில் கலப்பது தடுக்கப்பட்டுள்ளது என்றார்.