செங்கல் பட்டு அருகே அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அடுத்த தொழுப்பேடு அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை அரசு பேருந்து ஒன்று 50 பயணிகளுடன் சென்னையிலிருந்து சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, இரும்பு கம்பி ஏற்றிக்கொண்டு முன்னாள் சென்ற லாரியின் மீது இடதுபக்கமாக பேருந்து மோதியது. இதில், பேருந்தில் பயணித்த 2 பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். மேலும், 10 பயணிகள் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்த அச்சிறுப்பாக்கம் போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு மற்றும் மதுராந்தகம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இறந்தவர்களின் உடலை மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இறந்தவர்களின் அடையாளங்களை கண்டறியும் பணிகளை போலீஸார் மேற்கொண்டுள்ளனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.