கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, உலக சுகாதார அமைப்பு சர்வதேச அவசரநிலையை அறிவித்துள்ளது.
சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் உள்ள உகான் நகரத்தில் இருந்து இந்த கரோனா வைரஸ் மற்ற இடங்களுக்கும் வேகமாக பரவி வருகின்றது. கரோனா வைரஸ் காரணமாக சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 213 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 10,00 பேருக்கு வைரஸ் பாதிப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய் தொற்றை தடுக்க சீனா அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலிய உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டு வருகின்றது.
சீனாவில் இருந்து வெளிநாடுகளுக்கு இந்த வைரஸ் தொற்று பரவி உள்ளது. இந்தியா உட்பட உலகின் 17 நாடுகளில் இந்த நோய் பரவியுள்ளது. இந்த சூழலில், சீனாவில் உள்ள வெளிநாட்டினரை அங்கிருந்து அழைத்து வர அனைத்து நாடுகளும் தயார் நிலையில் உள்ளன. ஆனால், கரோனா வைரஸ் பாதிப்பில் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், உலக சுகாதார அமைப்பு சர்வதேச சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. இதன் மூலம் உலகின் அனைத்து நாடுகளும் இந்த வைரஸ் நோய்க்கான மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூறப்படுகிறது.