tamilnadu

img

இந்நாள் செப்டம்பர் 03 இதற்கு முன்னால்

1945 - எவ்ஜீனி அபலாக்கோவ் பொதுவுடைமை உச்சியை அடைந்த முதல் மனிதரானார். பொதுவுடைமை உச்சி என்பது சோவியத் ஒன்றியத்தில் இருந்தவற்றிலேயே அதிக உயரம்கொண்ட மலைமுகட்டின் பெயர்! அபலாக்கோவ் மலையேற்ற வீரர்! தாஜிகிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகியவற்றின் எல்லையில் அமைந்திருந்த, 23,406 அடி உயரம்கொண்ட, கவுஃப்மான் மலையே சோவியத் ஒன்றியத்திலேயே உயர்ந்ததாகக் கருதப்பட்டுவந்தது. அதனால், லெனின் மறைவுக்குப்பின் 1928இல் அம்மலை லெனின் உச்சி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பாமிர் மலைகளிலிருக்கும் கார்மோ உச்சி என்றே கருதப்பட்டுவந்த பொதுவுடைமை உச்சி, தாஜிகிஸ்தானில் அமைந்துள்ள, அறிவியல் கல்வியக மலைத்தொடர் என்று பெயரிடப்பட்ட மலைத்தொடரிலுள்ள ஒரு தனி முகடு என்பது 1932இல்தான் கண்டுபிடிக்கப்பட்டது.

24,590 அடி உயரம்கொண்ட இதுவே சோவியத் ஒன்றியத்திலேயே மிக உயர்ந்த மலைமுகடு என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. 1933இல் இதற்கு ஸ்டாலின் உச்சி என்று பெயர் சூட்டப்பட்டது. (அபலாக்கோவ் ஏறியபோது இதற்குப் பெயர் ஸ்டாலின் உச்சிதான்.) 1962இல் குருச்சேவ் காலத்தில்தான் இதன் பெயர் பொதுவுடைமை உச்சி என்று மாற்றப்பட்டது. 1991இல் தாஜிகிஸ்தான் தனி நாடாக ஆனதைத் தொடர்ந்து, 1998இல் இதன் பெயர் இஸ்மாயில் சோமோனி உச்சி என்று மாற்றப்பட்டது. சமானித் பேரரசின் அமீராக இருந்த இஸ்மாயில் இபின் அகமத் நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டது.

சமானித் பேரரசு என்பது, தற்போதைய ஆப்கானிஸ்தான், ஈரான், தாஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகியவற்றின் பெரும்பாலான பகுதிகளையும், பாகிஸ்தான், கஜகஸ்தான் ஆகியவற்றின் சில பகுதிகளையும் உள்ளடக்கி 819-999 காலத்தில் இருந்த ஒரு பேரரசு ஆகும். தாஜிக் மக்களின் மூதாதையர்கள் கி.மு.600களிலேயே இப்பகுதியில் வசித்திருந்தாலும், அகாமனீசியப் பேரரசு (அல்லது முதல் பாரசீகப் பேரரசு), சாசானியப் பேரரசு, ஹெப்தலைட் பேரரசு ஆகியவற்றின்கீழ் ஆளப்பட்டிருந்தாலும், சமானித் பேரரசின் காலத்தில்தான் கவனத்திற்குரிய பகுதியாக தாஜிகிஸ்தான் உயர்ந்தது. அதனாலேயே அப்பேரரசின் அமீர் ஒருவருடைய பெயரை, அந்நாட்டின் மிக உயர்ந்த மலைமுகட்டிற்கு அவர்கள் சூட்டினாலும், இன்றுவரை பொதுவுடைமை உச்சி என்றே அந்த முகடு குறிப்பிடப்படுகிறது.