கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளது என உலக சுகாதார அமைப்பு வருத்தம் தெரிவித்துள்ளது.
சீனாவின் உகான் மாகாணத்தில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் , இன்று உலகம் சுமார் 200 நாடுகளில் பரவி உள்ளது. தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 935,840-பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 47,241 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பிலிருந்து 194,286 மீண்டுள்ளனர்.
இதற்கிடையில் கொரோனாவால் நிகழ்ந்த உயிரிழப்புகள் கடந்த ஒரே வாரத்தில் இரட்டிப்பானது பெரும் கவலை தருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதோனம் கெப்ரிசிஸ் கூறியதாவது: கொரோனா ஏற்படுத்தி வரும் பாதிப்புகள் சமூக, அரசியல், பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. அடுத்த ஒருவாரத்தில் உலகளவில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு 10 லட்சத்தை தொடும். உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரமாக உயரும் என்றார்.