சீனாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தோர் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் உள்ள உகான் நகரத்தில் இருந்து இந்த கரோனா வைரஸ் மற்ற இடங்களுக்கும் வேகமாக பரவி வருகின்றது. பாம்புகள் மூலம் இந்த வைரஸ் பரவியதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் வைரஸ் காரணமாக சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கரோனா வைரஸால் 6000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 1,239 பேரின் நிலை மிகவும் மோசமாக உள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த சூழலில், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க உகான் நகரத்திற்கு அருகில் உள்ள ஹுங்கங் நகரத்தில், இரண்டே நாட்களில் கட்டப்பட்ட மருத்துவமனை ஒன்றை அனைத்து வசதிகளுடன் சீன அரசு தொடங்கி உள்ளது.
இதற்கிடையில், உகான் நகரத்தில் இருந்த ஜப்பான் நாட்டை சேர்ந்தவர்களை அந்நாட்டு அரசு, விமானம் மூலம் இன்று அதிகாலை மீட்டுள்ளது. சீனாவில் இருந்து மீட்கப்பட்டவர்கள், டோக்யோவில் உள்ள மருத்துவமனைகளில் வைரஸ் பாதிப்புக்கான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதே போல், உகானில் உள்ள அமெரிக்கர்களையும், அந்நாட்டு அரசு விமானம் மூலம் சொந்த நாட்டுக்கு கூட்டி சென்றது. இதைத் தொடர்ந்து, இந்தியா உட்பட மற்ற நாடுகளும், சீனாவில் உள்ள தங்கள் நாட்டவரை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது.