tamilnadu

img

நகராட்சி குடிநீரில் நெளியும் புழுக்கள் கள்ளக்குறிச்சி மக்கள் அதிர்ச்சி

கள்ளக்குறிச்சி, பிப்.6-  கள்ளக்குறிச்சி நகரின் பல்வேறு பகுதிகளில், நகராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து வீடுகளுக்கு வழங்கப்பட்ட குடிநீரில் ஏராளமான புழுக்கள் நெளிந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  கள்ளக்குறிச்சி நகராட்சியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளிலிருந்து நகரில் உள்ள 21 வார்டுகளிலும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. வாரத்திற்கு இரண்டு முறை அல்லது வாரத்திற்கு ஒரு நாள் என வினியோகம் செய்யப்படும். இந்நிலையில் வியாழனன்று (பிப்.6) வினியோகம் செய்யப்பட்டது. அப்போது குழாய்களில் தண்ணீர் பிடித்த பெண்கள், தண்ணீரில் ஏராளமான புழுக்கள் நெளிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். குறிப்பாக சிதம்பரம் பிள்ளை தெருவில் நூற்றுக்கணக்கான  புழுக்கள் உயிருடன் கிடந்துள்ளன.  சிறிது நேரம் கழித்தாவது, சுத்தமான முறையில் குடிநீர் வரும் என காத்திருந்த பெண்கள் தொடர்ந்து அசுத்தமாகவே குடிநீர் வந்ததால் தண்ணீர் பிடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.  தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யாமல் இப்படி புழுக்கள் குடிநீரில் வந்துள்ளதா? அல்லது இடையில் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு சாக்கடை நீர் குடிநீர் குழாயில் கலந்து புழுக்கள் மற்றும் அசுத்தத்துடன் குடிநீர் வந்ததா என தெரியவில்லை. இதுகுறித்து நகராட்சியில் விசாரித்தபோது தொட்டிகளிலிருந்து இணைப்பை பிரித்துத்தரும் ஊழியர்களுக்குதான் இதுகுறித்து தெரியும் என அலட்சியமாக பதில் கூறுகின்றனர். எனவே உடனடியாக கள்ளக்குறிச்சி நகராட்சி நிர்வாகம் நகரம் முழுவதும் குடிநீர் வழங்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் முழுமையாக சுத்தப்படுத்தியும், குழாய்கள் உடைப்பு இருந்தால் அதனை சரி செய்தும் சுகாதாரமான முறையில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கிட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.