சிதம்பரம்:
புவனகிரி அருகே தலித் ஊராட்சி மன்றத் தலைவரை அவமானப்படுத்திய துணைத் தலைவர் 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கவில்லை என்றால் பதவி நீக்கம் செய்யப்படும் என்று ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே தெற்கு திட்டை ஊராட்சி தலித் பெண் தலைவரை ஊராட்சி கூட்டங்களில் தரையில் அமர வைத்தும், அவரை தேசியக் கொடியை ஏற்ற விடாமல் அவமதிப்பு செய்த ஊராட்சி துணைத் தலைவர் மோகன் ராஜனுக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி மேற்கண்ட குற்றச்சாட்டுக்காக வரும் 15 ஆம் தேதிக்குள் நேரில் வந்து மாவட்ட ஊராட்சியின் ஆய்வாளரான மாவட்ட ஆட்சியரிடம் விளக்க கடிதம் எழுத்துப்பூர்வமாக கொடுக்க வேண்டும்.அப்படி செய்யத் தவறினால் உள்ளாட்சி அமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் துணைத் தலைவர் பதவி பறிக்கப்படும் என அந்த விளக்க நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.மாவட்ட ஆட்சியரின் கடிதம் துணைத் தலைவர் மோகன்ராஜ் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் கடிதத்தை பெற்றுக்கொண்டு உள்ளனர்.