tamilnadu

img

ஊராட்சிக்கூட்டத்தில் தலித் பெண் ஊராட்சித் தலைவரை தரையில் அமரவைத்த கொடுமை... சிதம்பரம் அருகே சாதி ஆதிக்கச்சக்தியினர் அட்டூழியம்

சிதம்பரம்:
சிதம்பரம் அருகே தெற்கு திட்டை ஊராட்சிமன்றக் கூட்டத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஊராட்சித் தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆகியோரை அவர்களுக்கான இருக்கைகளில் அமரவிடாமல், சாதி ஆதிக்கச்சக்தியினர் தரையில்அமரவைத்துள்ளனர். ஊராட்சிச் செயலரின்துணையுடன் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மேற்கொண்டு வரும் சாதிய வன்ம நடவடிக்கை தற்போது அம்பலமாகியுள்ளது.

அண்மையில் தலைநகருக்கு அருகாமையில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலித் பெண் தலைவர் தேசியக்கொடியை ஏற்ற விடாமல் அவமதித்தனர். இந்த விவகாரத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். உடனடியாக ஆய்வு செய்த மாவட்ட அதிகாரிகள் அந்த சம்பவம் உண்மை என்பதை அறிந்து உடனடியாக தலித் பெண் தலைவரை தேசியக் கொடியை ஏற்றவைத்தனர்.இந்த சம்பவத்தின் வடு மறைவதற்குள் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே புவனகிரியில் மீண்டும் ஒரு சாதிய வன்மச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

புவனகிரி அருகே உள்ளது தெற்கு திட்டைஊராட்சி. இந்த ஊராட்சியில் 100 குடும்பங்கள் ஆதிதிராவிடர் சமூகத்தை சார்ந்தவர்கள், 600-க்கும் மேற்பட்டோர் மாற்று சமூகத்தினர் உள்ளனர். நடந்து முடிந்த  உள்ளாட்சித் தேர்தலில் இந்த ஊராட்சி மன்றம் ஆதிதிராவிட சமூகத்திற்கு ஒதுக்கப்பட்டது. தேர்தலில் போட்டியிட்ட ராஜேஸ்வரி சரவணகுமார் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த ஊராட்சி மன்றம் ஆறு உறுப்பினர்கள் கொண்டது. ஒரு உறுப்பினர் மட்டுமே ஆதி திராவிட சமூகத்தைச் சேர்ந்தவர். மற்ற ஐந்து உறுப்பினர்களும் மாற்று சமூகத்தை சார்ந்தவர்களாவர்.பெரும்பான்மை உறுப்பினர்கள் சாதியஆதிக்கச் சிந்தனையில் உள்ளதால் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சார்ந்த ஊராட்சி மன்றதலைவரை குடியரசு தினம் மற்றும் சுதந்திரதினத்தன்று தேசியக் கொடி ஏற்ற விடவில்லை. மாற்று சமூகத்தைச் சார்ந்த துணைத் தலைவர் மோகன்ராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்துள்ளார். இதற்கு ஊராட்சி மன்ற செயலாளரும் துணை போயுள்ளார்.அதோடு மட்டுமின்றி, ஊராட்சி மன்றக்கூட்டத்தின் போது, தலித் ஊராட்சி மன்றத்தலைவரையும் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த ஒரு உறுப்பினரையும் அவர்களுக்கான இருக்கைகளில் அமரவிடாமல், அலுவலகத்திற்குள் தரையில் அமரவைத்துள்ளனர். ஊராட்சி மன்றத் தலைவருக்கான நாற்காலியில் சாதி ஆதிக்க சமூகத்தைச் சார்ந்த துணைத்தலைவர்  மோகன் ராஜ் அமர்ந்துள்ளார். மாற்று சமூகத்தைச் சார்ந்த 4 உறுப்பினர்களும் நாற்காலியில் அமர்ந்துள்ள புகைப்படம் தற்போதுதான் வெளியாகியுள்ளது. 
‘துணைத் தலைவர் மிரட்டுகிறார்’

இந்த சம்பவங்கள் குறித்து ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரியின் கணவர்செய்தியாளர்களிடம் கூறுகையில், “சம்பவங்கள் அனைத்தும் உண்மைதான். கீழ் சாதி என்பதால் தரையில் உட்கார வைக்கிறார்கள். ஊராட்சி மன்ற தலைவரான எனது மனைவி தாழ்ந்த சாதி என்பதால் தேசியக் கொடியைக் கூட ஏற்ற விடாமல் மேல் சாதிக்காரர்கள் தடுத்து விட்டனர். மேல் சாதியைச் சார்ந்த துணைத் தலைவர் எப்போது சொல்கிறாரோ அப்போதுதான் ஊராட்சி மன்றக் கூட்டத்தை நடத்த வேண்டும்என மிரட்டுகிறார். அவர்தான் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.  இங்கு நடக்கும் சம்பவங்களை வெளியில் சொன்னால், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையில் மேல்சாதிக்காரர்கள் அதிகமாக இருப்பதால் தலைவர் பதவியில் இருந்து எடுத்து விடுவோம் என்றும் மிரட்டி வருகின்றனர். இந்த மிரட்டல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் ஊராட்சி மன்ற பணிகளை செய்ய முடியவில்லை. அவர்களை மீறி எந்த பணியும் செய்ய விடுவதில்லை. ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் செய்ய உள்ளதாக கூறினார்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் ஊராட்சி மன்ற தலைவர் ,ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் செயல்பட அனுமதிக்காமல் சாதி ஆதிக்கச் சக்தியினர் மிரட்டி வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆட்சியர்-அமைச்சர் தலையிடுக: சிபிஎம் 
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரும் துறையின் அமைச்சரும் உடனடியாக தலையிட்டு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த பெண்  தலைவர் ஊராட்சி மன்ற நிர்வாகப் பணிகளை சுதந்திரமாக நடத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.       ( ந.நி.)